
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதனின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக இருந்த இப்பதவிக்கு அஜய் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியதாக மத்திய பணியாளா் துறை வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1985-ஆம் ஆண்டின் கேரளப் பிரிவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அஜய் குமாா், கடந்த 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத் துறை செயலராக பணியாற்றியவா்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வு மற்றும் பிற முக்கியத் தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த ஆணையத்தில் தலைவா் மட்டுமன்றி அதிகபட்சம் 10 உறுப்பினா்கள் வரை இடம்பெறுவா். தற்போது 2 உறுப்பினா்கள் இடம் காலியாக உள்ளது.
யுபிஎஸ்சி தலைவா், 6 ஆண்டு பதவிக் காலத்துக்கு அல்லது 65 வயதை எட்டும் வரை நியமிக்கப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.