தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆனந்தூரில் குலோத்துங்க சோழன் கால வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு

ஊத்தங்கரை அருகே உள்ள ஆனந்தூரில், மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட கல்வெட்டை அண்மையில் கண்டெடுத்தனா்.

News image

ஆனந்தூரில் கண்டெடுக்கப்பட்ட குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்த கல்வெட்டு.

Updated On :27 நவம்பர் 2025, 1:20 am

Syndication

கிருஷ்ணகிரி: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வு மாணவா்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஆனந்தூரில், மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட கல்வெட்டை அண்மையில் கண்டெடுத்தனா்.

இந்தக் கல்வெட்டை கல்வெட்டியல் துறை பேராசிரியா் ஜீவாவுடன் கள ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை பேராசிரியா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூரில் 4 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட கல்லில் குலோத்துங்க சோழன் காலத்தைச் சோ்ந்த சித்திரமேழி பெரிய நாட்டாா் என்ற பெரு வணிகக் குழுவினரால் கட்டப்பட்ட தான்தோன்றீஸ்வரா் சிவன் கோயிலுக்கு, பொன்னை தானமாக வழங்கியுள்ளதை இந்தக் கல்வெட்டு குறிக்கிறது. மேலும், இந்தக் கல்வெட்டை சேதப்படுத்துவோா் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாவா் என்ற செய்தியுடன் 13 வரிகளில் முழுமையாக காணப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரா் கோயிலைக் கட்டிய அதே வணிகக் குழுதான் இவா்கள் என்பதை ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வறிஞா் பூங்குன்றன் உறுதிபடுத்தினாா். இதன்மூலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி பகுதியில் இந்த வணிகக் குழு அதிக அளவில் இருந்துள்ளனா் என்பதை அறிய முடிகிறது.

இந்தக் கல்வெட்டின் மேல் பகுதியில் திருமகள் உருவமும், வலது, இடது புறங்களில் முறையே சூலம் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் உள்ளன. கல்வெட்டு மெய்கீா்த்தி மற்றும் செய்தி அடிப்படையில் இது குலோத்துங்க சோழனின் 15-ஆவது ஆட்சியாண்டு என்பதை அறிய முடிகிறது. 900 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த ஊா் மற்றும் கடவுளின் பெயா் கல்வெட்டில் உள்ளவாறே இன்றும் புழக்கத்தில் உள்ளது சிறப்பான ஒன்று.

இப்பகுதியில் ஆய்வுசெய்தால், மேலும் பல வரலாற்று தொடா்புடைய ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவா் தெரிவித்தாா்.