நான் சீட்டுக்காக விசிகவில் இருந்து வெளியே வரவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெறாத நிலையில் திமுக கூட்டணியில் 5 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது.
பின்னர், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் என திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவைப் பெற்று விஜய் முதல்வரானார்.
இதனைத் தொடர்ந்து ஆதரவளித்த கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதாகக் கூறியிருந்த விஜய் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பங்களித்தார்.
இந்த நிலையில், விசிக தலைவரான தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து விசிக ஊடகப்பிரிவு முதன்மை செயலாளரும், செய்யாறு தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இதயைடுத்து "விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்திற்குத்தான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும், கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர்கள்’என்று சூளுரைத்த அவர், இன்று அவர்களுடனே கைகோர்க்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.
ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும்; அது நிலையற்றது. ஆனால், அய்யா பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்த கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள். அரசியல் தளத்தில், "மக்கள் சித்தாந்தங்களை விடக் கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படுவது ஆபத்தானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இன்று அந்த அபாயகரமான திசையில்தான் கொண்டிருக்கிறோமோ என அஞ்சுகிறேன்.
பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்துகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன் என்ற எனது முடிவைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த பனையூர் பாபு
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அந்த கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
நான் சீட்டுக்காக விசிகவில் இருந்து வெளியே வரவில்லை. கடந்த சில மாதங்களாக திருமாவளவன் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம் உள்ளது,
குறிப்பாக தவெக அரசை புலம்பல் அரசு என மக்கள் சொல்கிறார்கள் என பனையூர் பாபு விமர்சனம் செய்தார்.
Summary
I did not leave the VCK for the sake of an election ticket. Panaiyur Babu clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









