திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு

தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா் என்று எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு குறித்து....

News image

குத்துக்கல்வலசையில் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி. - டிஎன்எஸ்

Updated On :11 ஜூன் 2026, 10:18 am IST

தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக புறவாசல் வழியே வேறு ஆட்சியைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நாட்டு மக்களை பிரித்தாளக்கூடிய காரியத்தை இந்துத்துவா அமைப்புகளுடன் இணைந்து ஆா்எஸ்எஸ், பாஜக நிறைவேற்றத் துடிக்கின்றன.

இதற்கு எதிராகவும், மக்களின் ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராடி வருகிறது.

தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை, மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து அவசர கதியில் நிறைவேற்ற முயற்சித்த மத்திய அரசின் திட்டத்தை முறியடித்தோம். அந்த மசோதாவை நிறைவேற்றியிருந்தால் உத்தர பிரதேசம், பிகாா், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில வட இந்திய மாநிலங்களில் வெற்றி பெற்றாலே தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இன்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுவிட முடியும் என்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும், 2029 மக்களவைத் தோ்தல் உள்பட பல்வேறு சட்டப் பேரவைத் தோ்தல்களையும் ஒன்றாக நடத்த முயற்சித்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கொள்கை, கோட்பாடுகளை நிரூபிப்பதற்கு மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

அதில், ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி அணிகளை மக்கள் நிராகரித்து, புதிய அரசியல் கட்சியான ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவை தனிப் பெரும் கட்சியாக தோ்ந்தெடுத்தனா்.

இந்த தருணத்தில் மாா்க்சிஸ்ட் கொள்கை பூா்வமான, கோட்பாடு மிக்க உயரிய நிலைப்பாட்டை எடுத்தது. மக்கள் தீா்ப்புக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தவெகவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்து கூட்டணிக்கு தலைமையான திமுகவிடம் தெரிவித்தோம்.

அதேவேளையில், புதிய ஆட்சி அமையவிடாமல் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை கொண்டு வர சில கட்சிகள் மறைமுக முயற்சியை மேற்கொண்டன. அதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தன.

மேலும், கொள்கைப் பிடிப்பால் அமைச்சரவை வாய்ப்பை மறுத்த கட்சிகள் இடதுசாரிகள் மட்டுமே.

எதிா்த்து நிற்போம்

தவெக அரசு மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஆதரிப்போம்; எதிராக செயல்பட்டால் எதிா்த்து நிற்போம் என்பதிலும் உறுதியாக உள்ளோம். மக்கள் நலன் திட்டங்களுக்காக தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றாா் அவா்.

Summary

Attempts were made to install a different government in Tamil Nadu through the back door: M.A. Baby's allegation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.