Enable Javscript for better performance
அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு பற்றிப் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை! ஆர்ஜே பார்வதி பேட்டி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு பற்றிப் பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை! ஆர்ஜே பார்வதி பேட்டி!

    By மணிகண்டன் தியாகராஜன்  |   Published On : 13th June 2018 12:37 PM  |   Last Updated : 13th June 2018 11:08 PM  |  அ+அ அ-  |  

    rj-paaru-th-madurai

     

    மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ரேடியோ சிட்டி பண்பலை ஒலிபரப்பானால் இவரின் குரலை கேட்க முடியும்.

    இவருடைய குரலை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அவர் வேறு யாரும் இல்லை. காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆர்ஜே பாரு (எ) பார்வதிதான்.

    அவரிடம்  உரையாடியதிலிருந்து:

    நான் பிறந்து வளர்ந்தது மதுரையில். சென்னை எம்சிசி கல்லூரியில் பி.ஏ. இதழியல் படித்தேன். அம்மா தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முன்னணி வார இதழில் மாணவர் பத்திரிகையாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஃபேஷன் துறை உள்பட பல்வேறு துறைகள் குறித்து எழுதி எனது எழுத்தாற்றலை வளப்படுத்திக் கொண்டேன். ஊடகத் துறையைத் தேர்வு செய்ததால் பல ஊடக நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். பண்பலை ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்தபோது ஆர்ஜே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.

    இரவு நேரங்களில் ரேடியோ கேட்டு அதன் மீது இளம் வயது முதலே தீராக் காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் கம்யூனிட்டி ரேடியோவிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இதழியல் மற்றும் அறிவியல் படித்தேன். அதைத் தொடர்ந்து, மதுரை ரேடியோ சிட்டியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. காலை 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நகைச்சுவையில் தொடங்கி சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். என்னுடன் சேர்ந்து மற்றொரு ஆர்ஜேவும் பேசுவார். 

    மதுரையில் ஜல்லிக்கட்டு முதல் வேறு எந்தவொரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தாலும் நேரில் அதை பார்த்துவிட்டு நிகழ்ச்சியில் அது தொடர்பாக பேசுவேன். சமூக பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்று அதிகம் விரும்புகிறேன். அழகுக் குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் சொல்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் எனக்கு நாட்டம் இருந்ததில்லை. 

    ஆணவக் கொலைக்கு எதிராக போராடிவரும் கெளசல்யா, சமூக விழிப்புணர்வு ஆவணப் படம் எடுத்த திவ்ய பாரதி உள்ளிட்டோரை ரேடியா சிட்டிக்காக சிறப்புப் பேட்டி எடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன். ஜெயமோகன், சல்மா உள்ளிட்ட எழுத்தாளர்களையும், சில அரசியல் தலைவர்களையும் எனது நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்கள். பணி நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.

    குடும்பம்?

    அப்பா, அண்ணன், அக்கா என்று குடும்பத்தில் அனைவரும் வழக்குரைஞர்கள். நானும் வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம். ஆனால், அது நடக்கவில்லை.

    நிகழ்ச்சிகளுக்கு முன் தயாரிப்பு செய்வது எப்படி?

    நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பதை ஆர்ஜேவாகிய நாங்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது. தினசரி நாளிதழ்கள் படிப்பதன் வாயிலாக பேசுவதற்கு பல்வேறு தலைப்புகள் கிடைக்கும். உள்ளூரில் நடக்கும் முக்கியப் பிரச்னைகளையும் பேசும் பொருளாக எடுத்துக் கொள்வேன்.

    எதிர்கால லட்சியம்?

    ரேடியோ ஜாக்கியாக இருந்து பண்பலை துறையில் அதிகம் சாதிக்க வேண்டும். விடியோ ஜாக்கியாக ஆக வேண்டும் என்பதும் எனக்கு விருப்பம். ஒலித்துறையில் இருந்து ஒளித்துறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். குறும்படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பின் மீதும் தீராக் காதல் உண்டு. சமூகத்துக்காக எப்போதும் எனது எழுத்தும், பேச்சும் தொடரும்.

    பிடித்தது?

    பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். சினிமாவும், புத்தகங்களும் நான் மிகவும் நேசிக்கிறேன்.

    மறக்க முடியாத பாராட்டு?

    மாதவிடாய் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பெண் ஆர்ஜேக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டு கிடைத்தது என்றும் நினைவில் இருக்கும்.

    ஆர்ஜே ஆக விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை?  

    தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீடியா என்றால் அச்சம் இருக்கிறது என்று கருதுகிறேன். அச்சத்தை தவிர்த்தால் மீடியா துறையில் ஜொலிக்கலாம். திறமை இருந்தால் போதும் பெண்களும் ஆர்ஜே ஆகலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. மதுரை ரேடியோ சிட்டியில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்பும் தருகிறார்கள். அதைப் பயன்படுத்தி, இந்தத் துறையில் ஜொலிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp