டொனால்டு ஜான் டிரம்ப் நாற்பத்தைந்தாவது அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பிறக்காத டொனால்ட் டிரம்பின் மூன்றாவது மனைவி மெலனியா டிரம்ப் அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
நாற்பத்தாறு வயதான மெலனியா- டொனால்ட் டிரம்ப் தம்பதிக்கு பத்து வயதில் பேர்ரன் என்ற பெயரில் ஒரு மகன் இருக்கிறார். இருநூறு ஆண்டுகளுக்கு முன், லண்டனில் ஆங்கிலேய தாய்க்கும், அமெரிக்க தந்தைக்கும் பிறந்த லூசியா என்பவர்தான் அமெரிக்காவில் பிறக்காத முதல் அமெரிக்கப் பெண்மணி என்ற பெயரை பெற்று இருந்தார். தற்போது இந்தப் பட்டியலில் மெலனியாவும் சேருகிறார்.
மெலனியா டிரம்ப், கம்யூனிஸ்ட் நாடான யுகோஸ்லாவியாவில் 1970ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் ஸ்லோவேனியாவில் மாடலாக தொழில் செய்து வந்தார்.
டொனால்ட் பற்றி மெலனியா சொல்வது:
"டொனால்ட் மிகவும் கடினமானவர். அதே சமயம், குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பவர். நண்பர்களிடமும் ஊழியர்களிடமும், நாட்டு மக்களிடமும் விசுவாசமாக இருப்பவர். உங்களுக்காக, உங்களது நாட்டுக்காக உரத்த குரல் கொடுக்க ஒருவர் தேவை என்றால் டிரம்ப்பை விட பொருத்தமானவர் வேறு யாரும் இல்லை'' என்றார்.
டொனால்ட் பிரச்சாரங்களில் ஈடுபட்டபோது, அவருடன் மெலனியா அதிகளவில் கலந்து கொள்ளவில்லை. காரணம், தேர்தல் பிரச்சாரத்தின்போது, மெலனியாவின் கவர்ச்சிப் படங்களை எல்லாம் எதிர் தரப்பினர் வெளியிட்டனர். ஆனால், அவற்றை எல்லாம் அவர் கண்டு கொள்ளவில்லை. டிரம்ப் - மெலனியா இருவரும் விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டனர்.
மாடல் தொழிலுக்காக மிலன், பாரீஸ் என்று சுற்றி விட்டு மெலனியா 1996-இல் அமெரிக்கா வந்தார். அப்போது அவர் டொனால்டை சந்திக்க நேர்ந்தது. காதல் மலர்ந்தது. இருவரும் 2005-இல் திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்க குடியுரிமை கிடைத்த பின்னர், இந்த கெüரவம், இந்த பூலோகத்தில் இந்த ஜென்மத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று மெலனியா தெரிவித்து இருந்தார்.
டொனால்டை 2005-இல் திருமணம் செய்தபோது மெலனியா அணிந்து இருந்த ஆடையின் மதிப்பு இரண்டு லட்சம் டாலர்.
என் கணவர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்ட மெலனியா, வெள்ளை மாளிகைக்குள் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்துடன் இன்னும் இரண்டு மாதங்களில் வலது கால் வைத்துக் குடியேறப் போகிறார்.