உங்களுக்கு இருக்கிறதா மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடும் பழக்கம். இல்லையென்றால் தயவுசெய்து இனிமேலாவது அப்படியொரு பழக்கத்தை கடைபிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஐயோடா நாங்கள் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டாமா? மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தால் வேலையில் சீட்டுக் கிழித்து விடுவார்களே?! என்று அலறுபவர்கள் நீங்கலாக மற்றையோர் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் மதியம் சாப்பிட்டு விட்டு குட்டித் தூக்கம் போடுபவர்களை வைத்து அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வே நடத்தி அதில் இப்படியொரு உருப்படியான முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி தனது 68 ஆவது வருடாந்திர மருத்துவ ஆராய்ச்சி அமர்வை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறது. அந்த அமர்வில் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் நிரூபணம் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு ஆய்வு தான் மதிய நேரத் தூக்கத்தின் பலனைப் பற்றியதான மேற்கண்ட ஆய்வு.
சராசரியாக 129.9 mm Hg அளவு ஹை பிளட் பிரஸ்ஸர் கொண்ட 212 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது தினசரி பிளட் பிரஸ்ஸர் அளவுகள், அவர்களது மதிய நேரத் தூக்க நேரம் மற்றும் அவர்களது லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட தகவல்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பதிவான தகவல்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகின. அதில் தெரிய வந்த உண்மை என்னவென்றால் ஹை பிளட் பிரஸ்ஸர் கொண்டவர்கள் தொடர்ந்து ஆரோக்யமான லைஃப்ஸ்டைலை மேற்கொண்டு மதிய நேரத்தில் குறைந்த பட்சம் 1/2 மணி நேரமாவது குட்டித் தூக்கம் போட்டால் அவர்களது பிளட் பிரஸ்ஸர் லெவல் சராசரியாக 5mm Hg அளவுக்கு குறைவது கண்டறியப்பட்டது. ஹை பிளட் பிரஸ்ஸருக்கான ஏனைய பிற சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடுகையில் இது மிக அருமையான சிகிச்சை முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் உயர் ரத்த அழுத்த பாதிப்பால் திணறுபவர்களுக்கு ஆண்டிஹைப்பர்டென்சிவ் மருந்துகளைக் குறைத்து விட்டு மதிய நேரக் குட்டித் தூக்கமே பிரதானமாகப் பரிந்துரைக்கப்படலாம் என மேற்கண்ட ஆய்வின் முடிவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.