கடுமையான இந்தக் கத்திரி வெயில் தாக்கத்தை சமாளிப்பது எப்படி?

கத்திரி வெயில் தாக்கத்தை சமாளிப்பது எப்படி என்பது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
கடுமையான இந்தக் கத்திரி வெயில் தாக்கத்தை சமாளிப்பது எப்படி?


செய்யக் கூடியவைகள்:

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் உள்ளூர் வானிலை முன் அறிவிப்பின் மூலம் வெப்ப தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். தாகமாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போதிய குடிநீரை அவ்வப்போது பருக வேண்டும்.

எடை குறைந்த, வெளிறிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும்போது, பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களில் வேலை செய்யும்போது, குடை அல்லது தொப்பி அணிய வேண்டும். தலை, கழுத்து, முகம், கை, கால்களை ஈரத்துணியினால் மூடிக் கொள்ள வேண்டும்.

புத்துணர்ச்சி தரக்கூடிய உப்புக்கரைசல்கள், இளநீர், பழங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சைச்சாறு, மோர் உள்ளிட்டவற்றை உள்கொள்ள வேண்டும். மயக்கம், இதர உடல் உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கால்நடைகளை நிழலான பகுதிகளில் தங்க வைத்து, குடிப்பதற்கு போதிய குடிநீர் வழங்கவும். வீட்டை திரைச்சீலைகள், மின் விசிறிகள், கொட்டகைகள் பயன்படுத்தி போதிய அளவு குளிர்ந்ததாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரால் குளிக்க வேண்டும். கர்ப்பிணிகள், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களின் மீது தனிக் கவனம் செலுத்துவது நல்லது.

செய்யக் கூடாதவைகள்:

பகல் 12 முதல் 3 மணி வரையிலான நேரத்தில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தின் உள்ளே குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ விட்டுச் செல்ல வேண்டாம்.

வெயிலின் தாக்கம் அதிகமான நேரங்களில் கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி, கார்பன் ஏற்றப்பட்ட பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உலர்ந்த, கெட்டியான மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com