முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் அற்புதமான உணவுகள்!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 07th November 2019 11:36 AM | Last Updated : 07th November 2019 11:36 AM | அ+அ அ- |

food to prevent breast cancer
இன்றைக்கு உலகில் உள்ள பெரும்பாலான பெண்களை அச்சுறுத்தி வரும் பூதங்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். தினமும் தொலைக்காட்சிகளில் வரும் மருத்துவ விளம்பரங்கள், தினமும் காலையில் செய்தித்தாட்களுக்குள் வைத்து அனுப்பப்படும் கையடக்க விளம்பர நகல்கள், எஃப் எம் ரேடியோக்கள் என அனைத்து மார்க்கங்களிலும் தற்போது மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நம்மை வந்தடைகின்றன. அப்படியான சமயங்களில் சட்டென ஒரு நொடி மார்பகப் புற்றுநோய் குறித்த பீதி அனைத்துப் பெண்களுக்குமே மனசுக்குள் வந்து மறைகிறது. 40 வயதுக்கு மேல் அனைத்துப் பெண்களுமே நிச்சயம் அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
குளித்து விட்டு உடை மாற்றும் போதும், இரவில் உறங்குவதற்கு முன்பு ஆடைகளை சற்றே தளர்த்திக் கொள்ளும் போதும் சரி சந்தேகத்துக்குரிய வகையில் மார்பகத்தில் கட்டிகளிருப்பது போல் தென்பட்டால் விஷயமறிந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் மார்பகப் புற்றுநோய் குறித்த சஞ்சலங்கள் எழாமல் இருப்பதில்லை. அப்படியான சூழலில் நாட்களைத் தள்ளிப்போடாமல் உடனடியாக ஒருமுறை அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்வதே நல்லது.
சரி பரிசோதனை முடிந்தாயிற்று. ஆயினும் பயம் போகவில்லை என்ற நிலையில் இருந்தீர்கள் என்றால். கீழே உள்ள டயட்டை (உணவுப் பழக்கத்தை) பின்பற்றுங்கள். நிச்சயம் இவற்றின் மூலமாக மார்பகப் புற்றுநோய் குறித்த வீண பயங்களைக் கடக்கலாம்.
- பிரக்கோலி மோசமான விளைவுகளை உண்டாக்கும் எஸ்ட்ரோஜன்களின் நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.
- வால்நட்டுகள் கேன்சர் செல்களின் அபிரிமிதமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- ஆளி விதை அதாவது ஃப்ளாக்ஸ் சீட்ஸில் இருக்கும் லிக்னன்கள் சாதாரணமாகத் தொடங்கும் புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்த உதவுகிறது.
- க்ரீன் டீயும், வீட்டில் அரைத்துப் பயன்படுத்தும் மஞ்சளும் மார்பகப் புற்றுநோய் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
மேற்கண்ட உணவுப் பொருட்கள் அனைத்தையுமே இணைப்பு உணவுகளாக நாம் தினமும் நமது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது தினமும் க்ரீன் டீ அருந்தலாம். மஞ்சளைத் தினமும் சமையலில் பயன்படுத்தலாம். பொதுவாக இந்தியச் சமைலறைகளில் மஞ்சள் இல்லாத நாட்களே கிடையாது. தினமுமே சாம்பார், பருப்புச் சாதம், இன்ன பிற குழம்பு வகைகளில் நாம் மஞ்சள் சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அசைவ உணவுகளைச் சமைக்கும் போது கண்டிப்பாக மஞ்சளும், மிளகும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்ப்புறங்களில் ஒரு சொளவடை உண்டு. ‘8 மிளகை இடுப்பில் கட்டிக் கொண்டு எதிரி வீட்டிலும் தைரியமாக விருந்து சாப்பிடலாம்’ என்று சொல்வார்கள்.
இவை தவிர, முளை கட்டிய தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ், பால் பொருட்கள் அனைத்தையுமே தினமும் உணவில் சேர்த்துக் கொண்டோமெனில் மார்பகப் புற்றுநோய் குறித்து பயம் கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர் உணவியல் மருத்துவ நிபுணர்கள்.