உடல்நலத்தைப் பேண தினமும் சாதாரண உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தக் கேட்டிருப்போம். குறைந்தது அரை மணி நேரம் சாதாரண நடைப்பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து வியாதிகள் வருவதைத் தடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இதனை உறுதி செய்ய தொடர் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் ஓடினாலே உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
சுகுபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் மிதமாக அல்லது தீவிரமாக ஓடுவது உடல், மனநலத்தை மேம்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு 'விஞ்ஞான அறிக்கைகள் (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் முந்தைய ஆய்வுகளில், சைக்கிள் ஓட்டுதல் பெரும்பாலும் சிறந்த உடற்பயிற்சி என்றும் கூறப்பட்டுப்பது. எனினும், ஓடும்போது உடலை நாமே தனித்து இயக்குவதால் உடல் முழுவதுமே புத்துணர்வு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுவதனால் நரம்பியல் செயல்பாடுகள் அதிகரிக்கும், உடல் உறுப்புக்கள் சிறப்பாக இயங்கும், தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நம்முடைய உடல் ஒவ்வொரு செயலில் ஈடுபடும்போது மூளையின் செயல்பாடு மறுபடுவதையும் ஆய்வாளர்கள் இதில் உறுதி செய்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ஓடுவது மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் பல நன்மைகளை வழங்கக்கூடியது என்பதையும் கூறியுள்ளனர்.
ஏதேனும் ஒருவகையில் தினமும் சிறிது நேரம் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.