
ஆண்டாண்டு காலமாக சமையலில் பயன்படுத்தி வரும் மஞ்சள் அதிகம் உணவில் சேர்க்கப்படும்போது எதிர் விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட மிகச்சிறந்த பொருள் மஞ்சள் என்று அறியப்படுகிறது. பழங்காலத்தில் இருந்து சமையலில் பெரும்பாலாக அனைத்து உணவுப் பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குர்குமின் எனப்படும் பாலிபினாலைக் கொண்டுள்ள மஞ்சள், ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நோயெதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.
உடலில் ப்ரீ ரேடிக்கல்ஸை சமநிலைப்படுத்தவும் செல்களை சேதப்படுத்துவதைத் தவிர்க்கவும் பயன்படும் மஞ்சள், மேலும் முடக்குவாதத்தை குறைக்கவும், வாயுவைக் குறைக்கவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் ஒட்டுமொத்தமாக உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுவதாக நம்பபடுகிறது.
இதையும் படிக்க | வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த 10 உணவுகளைச் சாப்பிடுங்கள்!
இந்நிலையில் மஞ்சள் அதிகமாக எடுத்துக்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் அதிகம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
இரும்புச்சத்து
ஏற்கெனவே இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவது பாதிக்கப்படும். மஞ்சளுடன் மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்புச் சத்து அளவை 20-90 சதவீதம் குறைத்துவிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சிறுநீரகத்தில் கல்
மஞ்சளில் 2 சதவீதம் ஆக்சலேட் உள்ளது. இது அதிகளவில் உடலில் சேரும்போது சிறுநீரகத்தில் கல் ஏற்படுகிறது. எனவே, அதிகமாக மஞ்சள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த மஞ்சள் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மஞ்சள், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரத்தம் உறைதல்
பொதுவாக, மஞ்சள் போன்ற உணவுப் பொருள்கள், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் நீங்கள் சில மருந்துகளின் செயல்திறனை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ரத்தம் உறைதலைத் தடுக்கும், ரத்தப்போக்கை அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது.
செரிமானக் கோளாறுகள்
நாள் ஒன்றுக்கு 1,000 மில்லி கிராமுக்கு அதிகமாக குர்குமின் எடுத்துக்கொள்ளும்போது வாயு பிரச்னை, வீக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஒரு ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் 1-4 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 0.45-3.6 கிராம் குர்குமினை உட்கொள்வதால் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் உடலில் அதிகம் சேரும்போது மேற்குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க | காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டால்... இவ்வளவு நன்மைகளா?