95 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

எட்டு லட்சம்  மாற்றுத்திறனாளிகள்  வாழ்கிறார்கள். இவர்களில்  ஐந்து சதவீதத்தினருக்குத்தான்  திருமணம் செய்து கொள்ளும்  வாய்ப்புகள் கிடைக்கின்றன.  இதர  95  சதவீதத்தினர்  ஏன்  திருமணம் செய்து கொள்ளவில்லை
95 சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
Updated on
2 min read

மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கைத் துணையைத்  தேடுவதில் ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

இது குறித்து  கல்யாணி  கோனா விளக்குகிறார்:


"எட்டு லட்சம்  மாற்றுத்திறனாளிகள்  வாழ்கிறார்கள். இவர்களில்  ஐந்து சதவீதத்தினருக்குத்தான்  திருமணம் செய்து கொள்ளும்  வாய்ப்புகள் கிடைக்கின்றன.  இதர  95  சதவீதத்தினர்  ஏன்  திருமணம் செய்து கொள்ளவில்லை   என்று  யாரும்  கவலைப்படவில்லை.. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் இல்லை. 

சமூகம் அவர்களின்  அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. உரிமைகளைத்  தருவதில்லை. தர மறுக்கிறது என்பதுதான் சரி.... மாற்றுத்திறனாளிகள்  தங்களின் உடல் குறைகளை எதிர்த்து  எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது.  பிறந்துவிட்டதினால் வாழ்ந்தாக வேண்டும்  என்ற காரணத்திற்காக  உரிமைகளுக்காக சமூகத்துடன்  போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில்  திருமணம் பற்றி  அநேக மாற்றுத்திறனாளிகளுக்கு நினைத்துப் பார்க்கவே  நேரம் இருப்பதில்லை.

பதினேழு  வயதில்  பெற்றோர்களிடம்  பண உதவி பெறுவதை நிறுத்திவிட்டேன். பிரேசிலில் வாழ்ந்திருக்கிறேன்.  அங்கே  தனியாகப்  போனேன். பிரேசிலில் ஆங்கிலம்  கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும்.   அங்கே தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள்  யாரும் கிடையாது.  ஸ்பானிஷ் அரசாங்க மொழி.  தெரியாத   இடம்... தெரியாத   மொழி..   தெரியாத நபர்கள்.. என்னால்  திரு திருவென்று   விழிக்க  மட்டுமே முடிந்தது .  

நான்  ஆங்கிலத்தில் கேட்பதை - சொல்வதைக்  கேட்ட  பிரேசில்  நாட்டவர்களும் பதிலுக்கு விழித்தார்கள்.  எனக்குத்  தெரிந்த  ஆங்கிலம் எனக்குக்   கை கொடுக்கவில்லை   அவர்கள்  மொழி  எனக்குத்  தெரியாதது  ஒரு இயலாமைதானே..  எனது இயலாமைகளினால் நானும்  ஒரு மாற்றுத் திறனாளியானேன்.  அந்த நாட்டு மக்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல்,  ஸ்பானிஷ்  மொழி  படித்தேன்.  கொலம்பியா  போனேன். அங்கும் அதே கதைதான்.   பிறகு  கம்போடியா... எல்லா  இடத்திலும்  என்னை ஒரு மாற்றுத்திறனாளியாகவே உணர்ந்தேன்.. அந்த உணர்வுதான்  என்னை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியிருக்க வேண்டும். நான் குஜராத்தைச் சேர்ந்தவள் என்றாலும், படித்தது மும்பையில்,  வாழ்வது  டில்லியில்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாக  வாழ்க்கைத்துணையைத்    தேடித்தரும்   திருமண சேவை மையம்  இல்லை  என்பது  தெரியவந்தது.  இது   இந்தியாவில் மட்டும்  உள்ள  நிலைமை  அல்ல. வெளிநாடுகளிலும்  இதே   நிலைமைதான். அதனால்   இந்தியர்களை  இந்த  விஷயத்தில்  குறை  சொல்ல  முடியாது.

மாற்றுத்திறனாளிகள்  அவர்கள்  திருமணம்  வேண்டாம்  என்று முடிவு செய்தால்  தனியாக  இருந்து கொள்ளட்டும்.   ஜோடியை   தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை  என்பதற்காகத் தனியாக,  தனிமையாக   யாரும் வாழவேண்டாம்.  தனியாக வாழவும் விடக் கூடாது   என்ற முடிவிற்கு வந்தேன். இந்த முயற்சியில்  நாமே முதன் முதலாக இறங்கினால் என்ன என்று தோன்றியது.  அந்த முடிவில்  உருவானதுதான்  "வாண்ட்டட்  அம்பரல்லா' (Wanted  Umbrella).

ஆன்லைன்  சேவை மட்டுமே  விரைவாக  செயல்படும் என்பதால்  ஆன்லைன் சேவை தொடங்க முடிவு செய்தேன். ஆனால்  ஆன்லைன்  சேவை தொடங்க சுமார் ஐந்து  லட்சம் செலவு  செய்யவேண்டும். பணத்திற்கு எங்கு போவது. இந்தப்  பொருளாதாரத் தேவையை  மக்களிடம் முன் வைத்தேன்.  சுமார்  ஆறு லட்சம் திரட்ட முடிந்தது. அதைவிட முக்கியமானது பலர் தந்த யோசனைகள்   அறிவுரைகள்.. அவை  எனது முயற்சிக்கு புதிய பாதை போட்டுத் தந்தன. அப்படித்  தொடங்கப்பட்டதுதான்  இன்க்லவ் (Inclov)  என்ற  நிறுவனம். 

இன்க்லவ்,   உலகில்   அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும்   வாழ்க்கைத் துணையைத்  தேடுவதற்காக   உருவாக்கப்பட்ட  முதல் செயலி. பார்வை இல்லாத  மாற்றுத்திறனாளிகளுக்கு  எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில்,  ஸ்க்ரீன் ரீடர், டாக்பேக் வசதிளை  உருவாக்கியிருக்கிறோம்.  இது பாதுகாப்பான செயலி  ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது.  கூடிய சீக்கிரம்,  வீடியோ  அழைப்பு வசதியையும் உருவாக்க இருக்கிறோம்.  இதனால், கேட்கும் சக்தி   இல்லாதவர்கள்,  பேச இயலாதவர்கள் சைகை மூலம்  பேசிப்   புரிந்து கொள்ள முடியும். இப்போதைய செயலி  ஆண்ட்ராய்ட்   தளத்தில்  இயங்குகிறது.  இந்த ஆன்லைன் வசதிக்கு அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது.  இன்க்லவ்வை   2016  ஜனவரி மாதம் 21-ம் நாள்  தொடங்கினேன்.  இதுவரை ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களிலிருந்து சுமார் இரண்டாயிரத்து முன்னூறு மாற்றுத்திறனாளிகள்  பதிவு செய்துள்ளனர். இதுவே  ஒரு சாதனைதான்.    

இன்க்லவ் சேவை   தொடங்கப்பட்ட  பத்து  நாட்களுக்குள்  அனிஷா - இம்ரான்   இந்த சேவையில் பதிவு செய்து, பரஸ்பரம் அறிமுகமாகி  பிடித்துப் போய் திருமணம் செய்து  கொள்ள  முடிவு செய்துள்ளனர் .  முப்பது வயதாகும் அனிஷா பானு முல்தானி ஆறு  ஆண்டுகளாக  தனக்கு ஒரு துணை  கிடைக்காதா  என்று  தேடிக் கொண்டிருந்தார்.    அனிஷா  போலியோ  நோயால் பாதிக்கப்பட்டவர்.  சக்கர நாற்காலி உதவியால்   வலம் வருபவர்.   

அனிஷா   சென்ற  ஆண்டில்  மிஸ் வீல்சேர் இந்தியா அழகிப்  பட்டத்தை வென்றவர். சூரத்தைச் சேர்ந்த அனிஷா  இன்க்லவ் சேவை  மூலமாக  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த  கரானா  இம்ரான்  என்பவருடன் அறிமுகமாகி   திருமணம் செய்து கொள்ள பரஸ்பரம்  ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னொருவர் சாகர். பார்வையற்றவர்.   எந்தக் குறையும் இல்லாத நதியா என்பவரின்  அறிமுகம் இன்க்லவ் சேவை  மூலம் கிடைக்க... இருவரும்  திருமணம் செய்து கொள்ளத்  தீர்மானித்துள்ளனர். 

வணிக ரீதியாகவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு  வாழ்க்கை அமைத்துத் தரும் சேவையிலும்  இன்க்லவ்  வெற்றி பெற்றுள்ளது.  வளர்ச்சி பெற்றுள்ளது.  இந்த சேவையை   சர்வதேச  மாற்றுத்திறனாளிகளுக்கும்   சென்றடைய,  தொடர்ந்து  உழைப்பேன்''  என்கிறார்  கல்யாணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com