நம்ம நாட்டை ரொம்பவும் அழகாக்க என்ன வேணும்? ஒரு ஐடியா... அப்புறம் அக்லி இந்தியன்ஸ்!

”பேச்சைக் குறைத்து, செயலில் இறங்கு” இது தான் ’அக்லி இந்தியன்’ அமைப்பின் கோஷம்.
நம்ம நாட்டை ரொம்பவும் அழகாக்க என்ன வேணும்? ஒரு ஐடியா... அப்புறம் அக்லி இந்தியன்ஸ்!
Updated on
1 min read

என்னடா இது 'சந்தூர் சோப்' விளம்பரம் மாதிரி இருக்கே! என்று நினைக்கிறீர்களா? ஆமாம் அப்படித்தான்... விளம்பரத்தில் பார்த்து ரசித்த ஒரு விசயத்தை நேரிலும் பார்க்க வேண்டுமென்றால் நாளை நவம்பர் 5 அதிகாலை 5.30 மணிக்கு அண்ணா ஆர்ச்சையும், அம்பா ஸ்கை வாக்கையும் இணைக்கும் அண்ணா நகர் மேம்பாலத்தின் அடியில். ஆஜர் ஆகுங்கள். ஆண்களும், பெண்களுமாய் தானாய் சேர்ந்த கூட்டம் போல சில நல்ல உள்ளங்கள் ஒன்றிணைந்து செயல்படும் ‘அக்லி இந்தியன்’ அமைப்பின் புராஜெக்ட் UFO வின் அடுத்த கட்ட ஸ்மார்ட் ஐடியாவைக் கண் முன்னே காணலாம்.

பேச்சைக் குறைத்து, செயலில் இறங்கு” இது தான் ’அக்லி இந்தியன்’ அமைப்பின் கோஷம்.

ஊரையும், உலகத்தையும் குறை சொல்ல ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இல்லை. குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் தீர்வு எப்படிக் கிடைக்கும்? செயல்பட்டால் தானே பலன் என்ற ஒன்று கிடைக்கக் கூடும். இதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள் தான் ’அக்லி இந்தியன்’அமைப்பினர். நகரெங்கிலும் அசுத்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை முற்றிலுமாகச் சுத்தப்படுத்தி பார்ப்போரை அசர வைப்பதற்காக மட்டுமே இந்த அமைப்பு செயல்படவில்லை. 

கிராமம், சிற்றூர், நகரம், மாநகரம் என்று எங்கு நோக்கினும் இந்தியாவில் காணக் குறைவில்லாத, பான்பராக் கறை உமிழப்பட்ட சுவர்கள், நெடுங்காலமாக அடைப்பெடுக்கப் படாமல் நாறிக் கொண்டிருக்கும் திறந்த வெளி பெருஞ்சாக்கடைகள், பெருமழை தூர்வாரி உதவிய பின்னும் அரசு மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தால் மீண்டும் சாக்கடைகளாகவே மாறிப் போன மாநகர சிற்றாறுகள், குப்பைத் தொட்டிகள் ஏராளமிருந்தும் அவற்றையும் மீறி சாலையோரங்களில் பாதசாரிகளை மூக்கைப் பொத்திக் கொண்டு நடமாடத் தூண்டும் குப்பைக் கூளங்கள். இத்தனையும் தினமும் நம் கண்களில் பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன. அவற்றைக் கடந்து தான் நாம் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும், திரையரங்குகளுக்கும் இன்ன பிற இடங்களுக்கும் சென்று வந்து கொண்டு இருக்கிறோம். 

எல்லோருமே வெறுமே இப்படி சென்று வந்து கொண்டிருந்தால் எப்படி? என்று சிலர் யோசித்ததின் பலன் தான் இந்த அக்லி இந்தியன் அமைப்பு. இந்த அமைப்பில் பொது சுகாதாரத்தில், பொதுச் சேவையில் ஆர்வமும், விருப்பமும் உள்ள யார் வேண்டுமானாலும் வாலண்டியர்களாக இணைந்து செயல்படலாம். பதிவுக் கட்டணம் ரூ.200. சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து அழகாக்க தேவையான உபகரணங்களை அவர்களே வாலண்டியர்களுக்குத் தருகிறார்கள். அதற்காக இந்தத் தொகை வசூலிக்கப் படுகிறது.

நல்லதைச் சொன்னா கேட்டுக்க வேண்டியது தான். அதற்காக நல்லதைச் செய்தால் பார்த்து ரசித்து விட்டு அப்படியே போய் விடாதீர்கள்.குறைந்த பட்சம் அவரவர் தெருக்களையாவது சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள முடிவு செய்யுங்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com