நடனமாடிக் கொண்டே ரசனையாகப் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் சென்னை போலீஸ்!

சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தனது பாணியில் பின்பற்றும் நடனம் போன்ற உத்தி அந்தப் பகுதி மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.
நடனமாடிக் கொண்டே ரசனையாகப் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் சென்னை போலீஸ்!

சென்னை மாநகராட்சி கட்டடப் பகுதி சிக்னலில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரியும் ராஜேஷ் அந்தப்பகுதியில் சாலையைக் கடக்கும் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்கிறார். காரணம், பிற போக்குவரத்துக் காவலர்களைப் போல அல்லாது தினசரி போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் அவர் பின்பற்றும் புதுமையான பாணி.

2003 ஆம் ஆண்டில் காவல்துறைப் பணியில் சேர்ந்த ராஜேஷ் 13 ஆண்டுகளாக சட்டம் ஒழுங்குத் துறையில் பணியாற்றினார் .பினர் 2016 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் காவலராகப் பணிமாற்றம் செய்யப்பட்ட இவர் சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தனது பாணியில் பின்பற்றும் நடனம் போன்ற உத்தி அந்தப் பகுதி மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. அதைப் பற்றிப் பேசுகையில் ராஜேஷ் தெரிவித்தது... அனைத்துப் போக்குவரத்துக் காவலர்களுமே அவரவர் பாணியில் அவர்களது வேலையை நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். நான் மட்டுமே நன்றாகச் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூற முடியாது.

சொல்லப்போனால் தமிழகக் காவல்துறையில் எனக்களிக்கப்படும் ஊக்கம் மற்றும் ஆதரவின் காரணமாகவே என்னால் இப்படி சுதந்திரமாகப் பணியாற்ற முடிகிறது. இந்த விஷயத்தில் இந்தப் பகுதி மக்கள் மற்றும் வீட்டில் என் மனைவி தரும் ஆதரவு இரண்டையுமே கூட நான் குறிப்பிட்டாக வேண்டும். அவையெல்லாம் தான் உற்சாகமாக என் வேலையைச் செய்ய வைக்கின்றன. என்கிறார். பெரிய மேடு காவல்பிரிவில் பணியாற்றும் ராஜேஷுக்கு மூன்று லட்சியங்கள் உண்டாம். அதில் முதல் லட்சியமாக அவர் குறிப்பிட்டது,  உலகின் எந்த மூலைக்குச் சென்று கேட்டாலும், உலகின் சிறந்த போலீஸ் யார் என்ற கேள்விக்கான பதில் தமிழக காவல்துறை என்பதாகவே இருக்க வேண்டும் என்பது, அடுத்ததாக தமிழகத்தில் ரிடையர்மெண்டுக்குப் பிறகு என்ன செய்வதென தெரியாமல் வீட்டோடு முடங்கிக் கிடக்கும் முதியோர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். அது மட்டுமல்ல எனது மூன்றாவது லட்சியத்தைப் பற்றி நான் இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும் போது நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என பீடிகை போடுகிறார் ராஜேஷ்.

அரசுப் பணியாளர்களிடையே குறிப்பாகச் சொன்னால், காவல்துறைப் பணியிலிருப்பவர்களிடையே மிகுந்து வரும் எந்திரத் தன்மைக்கு நடுவே ராஜேஷ் போன்ற உற்சாகமான, கலகலப்பான ஊழியர்களும் நீடித்து பெயர் பெற்று வருவது அதிசயம் தான். ராஜேஷ் மட்டுமல்ல, எந்த ஒரு வேலையைச் செய்பவர்களும் கூட தாம் செய்யும் வேலை தமக்குப் பிடித்திருக்கிறதா? என்று பார்த்து விட்டு, அந்த வேலையில் சோர்வு வரும்போதெல்லாம் ராஜேஷ் மாதிரி அந்த வேலையில் ஏதாவதொரு புதுமையைப் புகுத்தி எந்திரமயமான வேலையையும் கூட நமக்குப் பிடித்தமான செளகர்யமான வேலையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை ரசிக்கக் கூடும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com