தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். டீ குடிப்பதால் பல நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதனின் ஆகப்பெரும் ஆசுவாசமாக இருப்பது டீ தான். வேலையில்லா சூழலில் பலரின் பசிபோக்கியாகவும், தலைவலியில் இருந்து விடுபடவும் சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி அளிக்கவும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது எளிய விருந்தாகவும் தேநீர் இருக்கிறது. 

டீயில் பல வகைகள் உள்ளது அனைவருக்கும் தெரியும். டீ குடிப்பதால் பல நேர்மறையான தாக்கங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அந்தவகையில் டீயில் மிகச்சிறந்தது பிளாக் டீ தான். அதாவது பால் சேர்க்காத டீ. சில ஆய்வுகள் முழுக்க முழுக்க பிளாக் டீயை வைத்துதான் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த நேர்மறையான தாக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

பால் சேர்க்காமல் தண்ணீர், தேயிலை, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் டீயில், எலுமிச்சைச் சாறு, புதினா இலை, ஏலக்காய் தூள் இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து அருந்தலாம்.

பிளாக் டீயை தினமும் குடிப்பதால் என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். 

► ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு பிளாக் டீ ஒரு நல்ல மருந்து.

► இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதனால் நீங்கள் புத்துணர்வுடன் செயல்பட முடியும். 

► பிளாக் டீயில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது இன்னும் பலன் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை சேர்க்காமல் பிளாக் டீ அருந்தினால் விரைவிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். 

► ரத்த அழுத்தத்தைக் குறைகிறது, நீரிழிவு நோயாளிகள் இதனை அருந்தலாம். 

► பிளாக் டீ அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என்றும் ஓர் ஆய்வு கூறுகின்றது. அதுபோல புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

► உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது. 

► பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. 

► காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கப் பிளாக் டீயை குடித்துவிட்டு செய்வது, உடலில் கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். 

► மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தினமும் பிளாக் டீ அருந்துவதால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். 

► இதுதவிர பிளாக் டீ வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. செரிமானப் பிரச்னைகளை சரிசெய்கிறது. 

► உடலில் எலும்புகள் வலுவடைய உதவுகின்றன. 

► காபியைவிட தேயிலைகளில் காபின் அளவு குறைவாகவே உள்ளது என்பதால் காபியை விட தேநீர்தான் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

► 'அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சு', எனவே, நாள் ஒன்றுக்கு இரண்டு கப் பிளாக் டீயை எடுத்துக்கொள்வது சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com