ஜிம் செல்பவர்கள் குறிப்பாக 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்கள், உடற்பயிற்சி ஒழுங்குமுறைக்கு முன்பாக தங்களை முறையாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கோரி வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு பதின்பருவ வயதுடையவர் உள்பட நால்வர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு நாட்டில் மாரடைப்பு மரணங்கள் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணசியில் 32 வயதுடைய இளைஞர் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது புதன்கிழமை உயிரிழந்தார். ராஜ்கோட்டில் 17 வயதுடையவர், ஹனுமன் மதி செளக் பகுதியில் 40 வயதுடையவர் ஆகியோர் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.
குஜராத்தில் 34 வயதுடையவர் பைக் ஓட்டிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து, “உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது படிப்படியாக பயிற்சிகளையும் பயிற்சி நேரத்தையும் அதிகரிக்க வேண்டும், ஆரம்பத்தில் குறைவாகவே பயிற்சி இருக்க வேண்டும் மற்றும் ஒருவரின் தாங்குதிறனுக்கு ஏற்ப பயிற்சி அதிகரிப்பதே சரியானது” என டாக்டர் மனீஷ் அகர்வால் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்
இதய தமனி நோய்கள், சர்க்கரை நோய், அதிக அழுத்தம், இதய நோய்க்கான குடும்ப பின்னணி இப்படி பல காரணங்கள் குறித்து மருத்துவர்கள் கவனித்து எச்சரிக்க முடியும்.
புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்முறை, சர்க்கரை, உப்பு, ஆரோக்கியமற்ற எண்ணெய் பயன்படுத்திய ஜங்க் உணவுகள் உட்கொள்வது ஆகியவை மாரடைப்புக்கான சாத்தியக்கூறை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் ஒரு சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ரத்தம் உறைதல் மாரடைப்புக்கு வழிவகுக்கக் கூடும்.