திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,516 பதவிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 5,239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
திண்டுக்கல் வருவாய் கோட்டத்துக்குட்பட்ட நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஆகிய 7 ஒன்றியங்களில், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 1,683 பதவிகள் உள்ளன.
இதில், ஒரு ஒன்றியக் குழு உறுப்பினர், 6 ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 160 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 1,516 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் 1,241 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4,126 பேரும், 124 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 567 பேரும், 138 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 493 பேரும், 13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 63 பேரும் போட்டியிடுகின்றனர்.