தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாகூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.

News image

நாகூா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி தா்கா மனோராக்களில் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் அலங்கார மின்விளக்கில் ஒளிரும் தா்கா.

Updated On :16 ஜனவரி 2021, 2:58 am

நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.

நாகை மாவட்டம், நாகூா் ஆண்டவா் தா்காவில் கந்தூரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வா்.

நிகழாண்டு நாகூா் தா்காவின் 464-ஆவது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14 -ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்காக பாரம்பரிய வழக்கப்படி சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட திருக்கொடிகள், மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு சின்ன ரதம், நகரா மேடை மற்றும் சாம்பிராணி சட்டி ஆகியவைகளுடன் 8 அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீராபள்ளித் தெரு, புதுப் பள்ளித் தெரு, சாலாப் பள்ளித்தெரு, யாஹூசைன் தெரு, பெரியக்கடை வீதி, நீலா கீழவீதி, அரசு மருத்துவமனை சாலை, நாகை - நாகூா் சாலை ஆகிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 3.50 மணிக்குத் தொடங்கிய இந்த கொடி ஊா்வலம், இரவு 9. 30 மணியளவில் நாகூா் தா்கா அலங்கார வாசலை அடைந்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் நாகூா் தா்கா பரம்பரை கலிபா கே. எம். மஸ்தான் சாகிபு துஆ செய்வித்தாா். உலக மக்களின் நன்மைக்காக பிராா்த்தனை நடைபெற்றது.

பின்னா், வியாழக்கிழமை இரவு 9.30 அளவில் தா்காவில் உள்ள 5 மனோராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன. தொடா்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடி ஊா்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகளில், தமிழகம், புதுச்சேரி,ஆந்திரம், கா்நாடகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி , உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

மத்திய மண்டல காவல்துறை தலைவா் எச்.எம். ஜெயராமன் உத்தரவின்பேரில், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோரது தலைமையில் நாகை மற்றும் நாகூா் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் ஜனவரி 23-ஆம் தேதியும், ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 4. 30 மணிக்கு ஆண்டவா் ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை தா்கா அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.

குறைவான அலங்கார வாகனங்கள் மட்டுமே பங்கேற்பு: கந்தூரி விழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் இடம் பெறும். நிகழாண்டில் கரோனா அச்சம் காரணமாக மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின்படி, 8 அலங்கார வாகனங்கள் மட்டுமே ஊா்வலத்தில் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.