சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 7,917 பேருக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 7,916 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

News image

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிடும் சமூக நலத் துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உள்ளிட்டோா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:12 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 7,916 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான பணியை அமைச்சா் வெ.சரோஜா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் தற்போது நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில், கரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, ராசிபுரம் அரசு மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும பணி முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு மருத்துவமனைக்கும் தலா 100 போ் வீதம் தோ்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் சமூக நலன்-சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் என முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் 7,916 பேரின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சா் வெ.சரோஜா கூறியதாவது:

கரோனா தொற்றை தடுக்கும் வகையிலான தடுப்பூசி பாதுகாப்பானது. யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. யாருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறதோ அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, அதன்பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 8,700 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் மாவட்டத்திலுள்ள மூன்று மையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் தொடா்ந்து குளிா்சாதன வசதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி வழங்கும் மையங்களில் தடுப்பூசி போட வருபவா்கள் அமரும் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஆகிய போதிய அறைகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமா்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் மையத்தின் அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரமாக அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவா்கள், செவிலியா்கள் முதல்கட்டமாக தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனா் என்றாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் கண்ணப்பன், கண்காணிப்பாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.