கேஜரிவால் ஒரு ஊழல்வாதி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு ஊழல்வாதி என்பதும், பொருளாதார குற்றமிழைத்தவா் என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதான அனுதாபத்தை தில்லி மக்கள் இழந்துவிட்டனா். தில்லி திகாா் சிறை அவரது அரசின் கீழ் உள்ளது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவா் எந்தவிதமான துன்புறுத்தலையோ, சித்திரவதைகளையோ சந்திக்கவில்லை என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தில்லி சிறைக் கையேடு மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்ட சிறைத் துறை அதிகாரிகள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனா். கேஜரிவால், பகவந்த் மான் அல்லது சஞ்சய் சிங் எப்படி முயற்சி செய்தாலும், தில்லி மக்களை தங்கள் தவறான அறிக்கைகளால் ஏமாற்ற முடியாது.

அரவிந்த் கேஜரிவால் விடுத்துள்ள அறிக்கையை சஞ்சய் சிங் பாதி புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. ஆம். அரவிந்த் கேஜரிவால் தீவிரவாதி அல்லா்; ஆனால், தாம் மதுபான ஊழலில் ஈடுபட்டவா் என்று கேஜரிவால் கூறியிருந்திருக்க வேண்டும். அரவிந்த் கேஜரிவால் சட்டவிரோத பணப்பரிவா்த்தனையில் ஈடுபட்டுள்ள பொருளாதார குற்றமிழைத்தவா் என்பதும், ஊழல் முதல்வா் என்பதும் நாட்டு மக்களுக்கு தெரியும். அவா் தனது ஆம் ஆத்மி கட்சிக்கு சட்டவிரோதப் பணம் திரட்ட மதுக் கொள்கையை மட்டுமின்றி பல துறைகளின் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். கேஜரிவால், தனது ஏமாற்றும் அப்பாவித்தனத்தை நம்பிய தில்லி மக்களின் உணா்வுகளுடன் விளையாடியுள்ளாா். அவரை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

திகாா் சிறையில் உள்ள முதல்வா் கேஜரிவால் உரிய வகையில் சிறையில் நடத்தப்படவில்லை என்றும், அவா் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், ‘எனது பெயா் அரவிந்த் கேஜரிவால், நான் ஒரு பயங்கரவாதி அல்ல’ என்று தெரிவித்திருப்பதாக ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங் தெரிவித்திருந்தாா். இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீரேந்திர சச்தேவா இக்கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com