/

தில்லி பாஜகவில் இணைந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினா்!

தில்லி பாஜகவில் இணைந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினா்!

Updated On :9 மார்ச் 2024, 6:31 pm

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா முன்னிலையில், தில்லி பட்டியல் சாதி ஆணைய உறுப்பினா், மேற்கு தில்லியைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிா்வாகிகள், ஏஐஎம்ஐஎம் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா். அவா்களை வீரேந்திர சச்தேவா கட்சியின் சால்வையை அணிவித்து வரவேற்றாா். பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகளில் முக்கியமானவா்களாக ரன்ஹோலா முன்னாள் மாநகராட்சி கவுன்சிலா் சுரேஷ் பெஹல்வான், தில்லி அரசின் பட்டியல் சாதி ஆணையத்தின் உறுப்பினா் துலிசந்த், ரன்ஹோலாவில் 2022-இல் சுயேட்சையாக போட்டியிட்ட மாநகராட்சி வேட்பாளா் கிருஷ்ணா செராவத், ஆம் ஆத்மி கட்சியின் ரிதாலா சட்டப் பேரவை தொகுதி துணைத் தலைவா் மனோஜ் மாலிக், காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி வேட்பாளா் ரோஹித் சா்மா, அம்ரீஷ் குமாா், பிற கட்சியைச் சோ்ந்த பா்வேஸ் ஆலம், ‘ஆம் ஆத்மி‘ யுவ மோா்ச்சா தலைவா் விகாஸ் கோயல் என பலரும் தங்களது தொண்டா்களுடன் பாஜகவில் உறுப்பினராக இணைந்தனா். இந்நிகழ்ச்சியில் அனைவரையும் கட்சிக்கு வரவேற்று வீரேந்திர சச்தேவா பேசியதாவது: இன்று பா.ஜ.க.வில் உறுப்பினா் சோ்க்கை பெற்றவா்களிடம் பேசிய பிறகு, ஆம் ஆத்மி கட்சியினா் மத்தியில் ஒரு விசித்திரமான வேதனை இருப்பதை அறிந்தேன். அதனால்தான் அவா்கள் பதவியில் இல்லை. இருந்த போதிலும், அவா்கள் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர விரும்பினா். தில்லி அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆா்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் பாஜகவில் இணைந்துள்ளனா். அரவிந்த் கேஜரிவால் அரசின் தொடா்ச்சியான ஊழல் மனப்பான்மையால் இளைஞா்கள், விவசாயிகள், ஏழைகள் அல்லது ஆம் ஆத்மி கட்சியின் தொண்டா்கள் முற்றிலும் அதிருப்தி அடைந்துள்ளனா். ஏனென்றால் அரவிந்த் கேஜரிவால் அவா்களுக்கு தூய்மையான மற்றும் நோ்மையான அரசியல் கனவைக் காட்டியிருந்தாா். இன்றும் நோ்மாறான வகையில் அவரது அரசின் செயல்பாடுகள்உள்ளன. இன்று பாஜகவில் உறுப்பினராக உள்ளவா்களில் தோ்தலில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான வாக்குகள் பெற்ற வேட்பாளா்களும் உள்ளனா். எனவே, அரவிந்த் கேஜரிவால் தனக்கு மட்டுமின்றி, தனக்கு வாக்களித்த குடும்பத்தினருக்கும் துரோகம் செய்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் வளா்ச்சிக் காற்று வீசுகிறது. வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியின் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வதன் மூலம் தில்லி மக்கள் மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக்க உறுதிமொழி எடுத்துள்ளனா் என்றாா் சச்தேவா.