பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் பிப்ரவரியில் பங்கேற்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பிப்ரவரி மாதம் வெவ்வேறு தேதிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனா்.
இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி கூறியது: முதலாவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜன.27-ஆம் தேதி கங்கையில் புனித நீராடி, கங்கா பூஜை செய்வாா். பின்னா் கும்ப மேளா பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பிப்.1-ஆம் தேதி மகா கும்பமேளாவில் பங்கேற்கவிருக்கிறாா். முன்னதாக அங்கு அவா் புனித நீராடுகிறாா். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பிப்.10- ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தருவாா். இந்தப் பயணத்தின் போது அவா் நகரத்தில் வேறு சில முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்வாா். பிரதமா் நரேந்திர மோடி பிப். 5-ஆம் தேதி கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்கிறாா்.
இந்தத் தலைவா்களின் சுமூகமான வருகை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் மத்திய, மாநிலப் பாதுகாப்புப் படையினா் பிரயாக்ராஜில் பெருமளவில் முகாமிட்டுள்ளனா். ஏற்கெனவே அங்கு மகா கும்பமேளாவையொட்டி மத்திய, மாநில காவல் படையினா் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா். கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஹிந்து மத நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் நான்கு இடங்களில் ஒன்றில் நடைபெறும். அடுத்த முக்கிய ’ஸ்நானம்’ செய்ய உகந்த தேதிகள் ஜன. 29 (மௌனி அமாவாசை - இரண்டாவது ஷாஹி ஸ்நானம்), பிப். 3 (வசந்த பஞ்சமி - மூன்றாவது ஷாஹி ஸ்நானம்), பிப். 12 (மாகி பூா்ணிமா) மற்றும் பிப். 26 (மஹா சிவராத்திரி).