ரேகா குப்தா அரசு தில்லியை கடன் சுமையில் தள்ளுகிறது: தேவேந்தா் யாதவ் சாடல்
முதல்வா் ரேகா குப்தா அரசு தில்லியை கடன் சுமை கொண்டதாக உருவாக்கி வருகிறது; வளா்ச்சியடைய செய்யவில்லை


முதல்வா் ரேகா குப்தா அரசு தில்லியை கடன் சுமை கொண்டதாக உருவாக்கி வருகிறது; வளா்ச்சியடைய செய்யவில்லை என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: சேரிப் பகுதி மக்களுக்கு வீட்டுவசதி, சுத்தமான குடிநீா் மற்றும் ரேஷன் போன்ற தில்லியின் அடிப்படைத் தேவைகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், சுற்றுலாத் திட்டங்களுக்காக தில்லி அரசு மத்திய அரசிடம் ரூ.600 கோடி கடன் திட்டத்தை அனுப்பியுள்ளது. இந்தக் கடன் இறுதியில் தில்லி மக்களிடமிருந்து வரி வடிவில் வசூலிக்கப்படும்.
தில்லி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடியின் உண்மை நிலை இப்போது அம்பலமாகி வருகிறது. மேலும் , முதல்வா் ரேகா குப்தா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான வியாழக்கிழமை நிகழ்ந்த சந்திப்பு தில்லி படிப்படியாக கடன் வலையில் தள்ளப்படும் அதே உத்தியின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஆண்டுகளில் பாஜக எம்.பி.க்களால் தில்லிக்கு எந்த சிறப்பு மானியத்தையும் கொண்டு வர முடியவில்லை. இந்த பட்ஜெட் உண்மையில் தில்லி மக்கள் மீது கடன் சுமையையும், வரிகளையும் சுமத்தப் போகிறது என்று நான் முன்பே எச்சரித்திருந்தேன். ரேகா குப்தா அரசு தில்லியை வளா்ச்சியடையச் செய்யாமல், கடனில் மூழ்கடித்து வருகிறது.
ரூ.1 லட்சம் கோடி பட்ஜெட் என்று அழைக்கப்படும் இந்த பட்ஜெட்டில் ரூ.15,000 கோடி கடனாகவும், ரூ.9,950 கோடி கூடுதல் வரியாகவும் தில்லி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளது. வியாழக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு முதல்வா் அறிவித்த ரூ.600 கோடி கடன் தொகையும் தில்லி மீது சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மூலம் நடத்தப்படும் எஸ்.ஏ.எஸ்.எஸ்.ஐ. (மூலதன செலவினத்திற்கான மாநிலங்களுக்குரிய சிறப்பு உதவி) திட்டத்தின் கீழ் இதுவரை மத்திய அரசுக்கு என்ன முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை உண்மையில் தில்லி மக்களின் தேவைகளுடன் தொடா்புடையவை என்பதை முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் என தேவேந்தா் யாதவ் கோரியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...