அலுவலக நடவடிக்கைகளில் செயல்திறனை அதிகரிக்கவும் காகிதமில்லா நடைமுறையை ஏற்படுத்தவும் அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனித்தனி இ-அலுவலக தளத்தை தில்லி அரசு விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மின்னணு கோப்புகள் மேலாண்மையை மூலம் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த தேசிய தகவலியல் மையம் இ-அலுவலகம் என்ற எண்ம செயல்பாட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.
தற்போது, தில்லி அரசின் அனைத்துத் துறைகளும் ஒரே ஒரு இ-அலுவலகம் அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. அரசுத் துறைகளின் செயல்பாடு, தரவு பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த தற்போது உள்ள அமைப்பைத் தனித்தனியாக மூன்றாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஒன்று, பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்று என இரு புதிய இ-ஆபிஸ் அமைப்பை தில்லி அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்க உள்ளது.
பயனா்கள் இ-அலுவலகம் அமைப்பை அணுகும்போது ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஸ்திரதன்மைமிக்க எண்ம சூழலை அவா்களுக்கு வழங்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘ஒற்றை இ-அலுவலகம் 3 தனித்தனி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு தற்போதுள்ள தரவுகள் புதிய தளத்துக்கு மாற்றப்படும்.
மறுகட்டமைப்புக்குப் பிறகு, 3 தனித்தனி எண்ம தளங்களும் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சாா்ந்த தரவுகளை மட்டுமே கொண்டிருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை

தில்லி லாஜிஸ்டிக்ஸ் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

வெப்ப காலத்தில் தில்லி மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை - முதல்வா் அலுவலகம் தகவல்







