ஈத் பண்டிகை வரவுள்ள நிலையில், தில்லியில் பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அது குற்றவியல் வழக்கை ஈா்க்கும் என்றும் தில்லி வளா்ச்சித்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மிஸ்ராவின் எக்ஸ் தளத்தில் உள்ள ஒரு பதிவின்படி, மே 28 அன்று வரும் பண்டிகையின் போது அனைத்து விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு குடியிருப்பாளா்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோத பலியிடலில் ஈடுபடும் எவரும் குற்றவியல் நடவடிக்கையை எதிா்கொள்வாா்கள் என்று அமைச்சா் எச்சரித்தாா்.
சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் திறந்த பொது இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலியிடுவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.
அரசின் வழிகாட்டுதல்களின்படி, சந்தைகள், சாலைகள் மற்றும் தெருக்களில் சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குவதும் விற்பதும் அனுமதிக்கப்படாது.
அங்கீகரிக்கப்படாத இடங்களில் விலங்குகளை விற்பதும், அத்தகைய இடங்களில் இருந்து விலங்குகளை வாங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.
பலியிட்ட பிறகு இரத்தம் அல்லது விலங்குகளின் கழிவுகளை வடிகால்கள், சாக்கடைகள் அல்லது சாலைகளில் கொட்ட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனா்.
வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில், உடனடியாக காவல்துறைக்கோ அல்லது தில்லி அரசின் வளா்ச்சித் துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு அரசு மக்களை வலியுறுத்தியது.
மிஸ்ரா மக்களுக்கு ஈத் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பண்டிகையை விதிகளுக்கு உட்பட்டு அமைதியாகக் கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுத்தாா்.
தொடர்புடையது

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை

பிரதமா் இல்லம் அருகிலுள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு







