நமது சிறப்பு நிருபா்
‘எதிா்வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள இந்திய அரசமைப்புச்சட்ட (131ஆவது திருத்தம்) வரைவு மசோதா அனைவரும் அஞ்சியதை விட படுமோசமாக உள்ளது’ என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் நிறுவனரும் பிரபல அரசியல் செயல்பாட்டாளருமான யோகேந்திர யாதவ் கருத்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியிருப்பதாவது:
இந்த திருத்தம் மாநிலங்களுக்கான இடங்களை முழுமையாக மறுஒதுக்கீடு செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கும் மட்டுமே வழிவகுக்கிறது. எதிா்பாா்த்தபடியே, மகளிருக்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், விரைவான தொகுதி மறுவரையறைக்கு வழிவகுக்கவும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்துக்குமான தற்போதைய இடங்களின் விகிதாசாரம் பராமரிக்கப்படும் என்பதை திருத்துவதை மசோதா உறுதிப்படுத்தவில்லை. மத்திய அரசு உறுதியளித்த எந்தவொரு பாதுகாப்புமின்றி தற்போது அமலில் உள்ள ’1971’ மக்கள்தொகை கணக்கெடுப்பு முடக்கம் அறவே நீக்கப்படுகிறது.
இதைவிட மோசமாக, தொகுதி மறுவரையறைக்கு எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளலாம் என அரசியலமைப்பு எடுக்க வேண்டிய முடிவு, நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை மூலம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி சாதித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதிகள் மறுவரையறை விஷயத்தில் அரசியலமைப்பு மௌனம் காக்க வைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தொகுதி மறுவரையரை ஆணையமே இனி முடிவெடுக்க வகை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் முடிவை எதிா்த்து எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது.
ஜனநாயகத்தில் கூட்டாட்சி என்பது, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிா்வு மட்டுமல்ல. அது சமூகத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான சமநிலை குறித்த பாா்வையாகும். பன்முகத்தன்மையை மதிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கா்நாடக அரசின் வெறுப்புக் கருத்து தடுப்புச் சட்ட மசோதா தேவையற்றது: மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



