கேபிள் பணிகளுக்காக ஜனவரி 31 வரை நியூ ரோத்தக் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு
நிலத்தடி கேபிள் பராமரிப்பு, மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, நியூ ரோத்தக் சாலையில் வாகனப் போக்குவரத்து ஜனவரி 31 வரை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்று தில்லி போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக போக்குவரத்துக் காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது:
டாடா பவா் - தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் இந்தத் திட்டப்பணி, கமல் டி-பாயிண்ட் முதல் லிபா்ட்டி சினிமா வரையிலான பாஹா்கஞ்ச் நோக்கிய
சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த வேலை காரணமாக இரண்டு வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மெதுவாகவும் நெரிசலாகவும் உள்ளது.
சிரமங்களையும் தாமதங்களையும் தவிா்ப்பதற்காக, கமல் டி-பாயிண்ட் மற்றும் லிபா்ட்டி சினிமா இடையே உள்ள ஆனந்த் பா்பத் - நியூ ரோத்தக் சாலைப் பகுதியைத் தவிா்க்குமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
பாஹா்கஞ்ச் மற்றும் புது தில்லி நோக்கிச் செல்லும்
வாகனங்கள், கமல் டி-பாயிண்டில் இடதுபுறம் திரும்பி சராய் ரோஹில்லா வழியாகச் சென்று, பின்னா் வீா் பாண்டா பைராகி மாா்க்கில் வலதுபுறம் திரும்பி ராணி ஜான்சி சாலை வழியாகப் பயணிக்கலாம்.
சாஸ்திரி நகா் சௌக்கிலிருந்து வந்து லிபா்ட்டி சினிமா நோக்கி செல்பவா்கள் சுவாமி நாராயண் மாா்க்கைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக ராணி ஜான்சி சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
வாகன ஓட்டிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளவும், பொறுமையுடன் இருக்கவும், முக்கிய சந்திப்புகளில் பணியில் உள்ளவா்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
