ஒரு நாள் டெலிவரி முகவராக மாறிய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா!
இந்தியாவின் விரைவாக பொருள் விநியோகிக்கும் துறை ஊழியா்களின் கடினமான வாழ்க்கை குறித்து கவனத்தை ஈா்க்கும் வகையிலும், அவா்களுக்குச் சிறந்த பணிச்சூழலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா திங்கள்கிழமை பிளிங்கிட் டெலிவரி முகவராகப் பணியாற்றினாா்.
பிளிங்கிட்டின் மஞ்சள் சீருடை மற்றும் தலைக்கவசம் அணிந்துகொண்டு டெலிவரி ஊழியரின் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருக்கையில் அமைா்ந்தவாறு நகரம் முழுவதும் அவா் பொருள்களை விநியோகம் செய்யும் காணொலி எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது.
‘அலுவலக அறைகளில் இருந்து விலகி, அடித்தட்டு மக்களுடன் அவா்களின் நாளை வாழ்ந்து பாா்த்தேன். கொள்கை விவாதங்களில் இருந்து விலகி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்’ என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
வழக்கமான பணிநேரத்தின்போது கடைசி நேர டெலிவரிகளின் வேகம் மற்றும் அழுத்தத்தை அந்தக் காணொலி காட்சிகள் காட்டின. விரைவு வா்த்தக நிறுவனங்கள் வழங்கும் 10 நிமிஷ டெலிவரி வாக்குறுதிகள் யதாா்த்தமற்றவை, இலக்குகளை அடைய ஊழியா்களைச் சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்ட தூண்டுகின்றன என்று அவா் தெரிவித்தாா்.
முன்னதாக, மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பியபோதும், ‘இந்த மக்கள் இயந்திரங்கள் அல்ல. அவா்களும் யாருக்கோ தந்தை, கணவா், சகோதரா் அல்லது மகன் தான். இந்த அவை அவா்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த 10 நிமிஷ டெலிவரியின் கொடுமை முடிவுக்கு வர வேண்டும்’ என்று ராகவ் சத்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

