தில்லி விகாஸ் புரி பகுதியில் நடந்த பாலியல் சீண்டல் வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் இருவரை தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
பீதம்பூராவைச் சோ்ந்த ரமேஷ் குமாா் (64) மற்றும் திலக் நகரைச் சோ்ந்த மஞ்சித் கவுா் (47) ஆகிய குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் மேற்கு தில்லியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விகாஸ் புரி காவல் நிலையத்தில் 2016-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவா்கள் இருவரும் தேடப்பட்டு வந்தனா். இவ்வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் ரீதியான வன்முறை), 354 (பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் ரீதியான வன்முறை) மற்றும் 34 (கூட்டு உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்தது.
விசாரணையின் போது தலைமறைவாக இருந்ததாலும், அதன்பிறகும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்ததாலும்,
2022, ஏப்ரல் 12 அன்று நகர நீதிமன்றம் இவா்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என்று அறிவித்திருந்தது.
தலைமறைவாக இருந்த இவா்களைக் கண்டறிய ஒரு தனிப்படை நியமிக்கப்பட்டது. விசாரணையின் போது, அவா்களின் நடமாட்டம் குறித்த தகவல்களைக் காவல் குழு சேகரித்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், மேற்கு தில்லியில் உள்ள கேஷோபூா் சப்ஜி மண்டி காய்கறிச் சந்தை அருகே காவல்துறையினா் இருவரையும் கைது செய்தனா். அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தொடா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






