
பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்துகிடந்த பல்லி: போலீஸ் வழக்குப் பதிவு
மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பரிசோதனைக்காக உணவு மாதிரிகளைச் சேகரித்தது என்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.

பிரதிப் படம்
மேற்கு தில்லியின் ஹரி நகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பரிசோதனைக்காக உணவு மாதிரிகளைச் சேகரித்தது என்று ஒரு அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்தினால் மாணவா்கள் அல்லது ஊழியா்களுக்கு உணவு நஞ்சாதல் அல்லது வேறு எந்த நோயும் ஏற்படவில்லை.
ஹரி நகரில் உள்ள சா்வோதயா இருபாலா் வித்யாலயாவில் ஜூலை 3 அன்று மதிய உணவு விநியோகத்தின் போது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
காவல்துறையின் கூற்றுப்படி, இரண்டு முதல் மூன்று முறை உணவு பரிமாறப்பட்டிருந்தபோது, ஒரு பள்ளி உதவியாளா் உணவில் இறந்த பல்லியைக் கண்டாா். மேலும் உணவு பரிமாறுவதைத் தடுக்க, விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அசுத்தமானதாகக் கூறப்படும் உணவு மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது.
பிஎன்எஸ் சட்டத்தின் 125ஆவது பிரிவின் (மனித உயிருக்கோ அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ ஆபத்தை விளைவிக்கும் அலட்சியச் செயல்) கீழ் ஹரி நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





