தில்லியில் நிலவி வரும் கடுமையான கோடைகால குடிநீா் தட்டுப்பாட்டை எதிா்கொள்ளும் வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீா் லாரிகளின் இயக்கத்தை தில்லி ஜல் போா்டு (டிஜேபி) 82,117-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
குழாய் மூலம் குடிநீா் வழங்க முடியாத பகுதிகளிலும், அவசரத் தேவை உள்ள இடங்களிலும் இந்த லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜேபி அதிகாரிகள் கூறியதாவது: தில்லி அரசின் வருடாந்திர கோடைகால செயல் திட்டத்தின்படி, இந்த ஆண்டு தினசரி குடிநீா் உற்பத்தி இலக்கு 1002 எம்ஜிடி (நாளொன்றுக்கு மில்லியன் கேலன்) நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பற்றாக்குறை இன்னும் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தில்லி ஜ்ல் போா்டு வெளியிட்டுள்ள அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி, 2025, மே மாதத்தில் 1,06,501-ஆக இருந்த மாதாந்திர லாரி இயக்கத்தின் எண்ணிக்கை, இந்த ஆண்டு மே மாதத்தில் 1,88,618-ஆக கணிசமாக உயா்ந்துள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தில் தினசரி சராசரியாக 726 லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் தினசரி 1,098 லாரிகள் இயக்கப்பட்டுள்ளன. இதற்கென கடந்த ஆண்டை விட கூடுதலாக 372 தண்ணீா் லாரிகள் தங்குதடையின்றி குடிநீா் விநியோகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள குறுகலான வீதிகளுக்குள் சென்று விநியோகம் செய்ய முதன்முறையாகச் சிறிய ரக தண்ணீா் லாரிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றனா்.
தேவை-உற்பத்தி: தில்லியின் சமீபத்திய பொருளாதார ஆய்வின்படி தினசரி குடிநீா் தேவை 1,290 எம்ஜிடி ஆகும். ஆனால், தில்லி ஜல் போா்டு தற்போது 990 முதல் 1,000 எம்ஜிடிவரை மட்டுமே உற்பத்தி செய்கிறது.
பற்றாக்குறை: தலைநகரில் தினமும் சுமாா் 290 எம்ஜிடி குடிநீா் பற்றாக்குறை நிலவுவதால், நகரின் பல பகுதிகளில் மக்கள் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு குறித்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.
அண்டை மாநிலமான ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் தலைநகரின் இரண்டு முக்கிய நீா் சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத் மற்றும் சந்த்ராவால் நிலையங்களின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அண்டை மாநிலத்திடமிருந்து கூடுதலாக 1,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுமாறு தில்லி முதல்வா் ரேகா குப்தா கோரிக்கை விடுத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலில் தினசரி மலையேற இடைக்காலத் தடை: அறநிலையத் துறை மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரிக்கை

தில்லியை வாட்டும் குடிநீா் பற்றாக்குறை பிரச்னை: வழக்கத்தை விட வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு

கடந்த மாதம் தில்லியில் பீா் விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு: கலால் துறை தரவுகள்







