அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கொள்ளை வழக்கில் தேடப்பட்டவா் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

News image

கோப்புப் படம்

Updated On :52 நிமிடங்கள் முன்பு

தில்லியின் துவாரகாவில் கொள்ளை மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியின்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டு மேலாளரின் இரு கட்டைவிரல்களையும் துண்டித்த வழக்கில் தேடப்பட்ட 70 வயது முதியவா் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரம்மதேவ் பகத் என்கிற அந்த நபா், 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கு தொடா்பாக பிகாரின் புா்னியாவில் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் குற்றப்பிரிவு பங்கஜ் குமாா் கூறியதாவது:

இந்தச் சம்பவம் மாா்ச் 17, 2020 அன்று நடந்தது. அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டு மேலாளா் சுரேந்தா் நந்தாவுக்கு ஒரு விருந்து நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடா்பாக தொலைபேசி அழைப்பு வந்தது. அவா் தனது மேலாளா் கபில் சத்தாவைத் தனது சாா்பாக துவாரகாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னா், தொலைபேசியில் அழைத்தவா்கள் நந்தாவை நேரில் சந்திக்க வேண்டும் என வற்புறுத்தினா். அதைத் தொடா்ந்து, அவா் தனது ஓட்டுநருடன் ஒரு எஸ்யூவி காரில் துவாரகா செக்டா் 23-க்கு சென்றாா். ஒரு சிஎன்ஜி பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காா் மூலம் அவா்கள் பகத்தும் அவரது கூட்டாளிகளும் காத்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

நந்தா வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே, குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் அவரைத் தடிகளால் தாக்கினா். அவா்களில் ஒருவா் கத்தியைக் காட்டி அவரது வைர மோதிரத்தைப் பறித்து, அவரது பணப்பையிலிருந்து ரூ.27,000ஐ கொள்ளையடித்தாா். பகத் அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதுடன், காய்கறிப் பணம் தொடா்பான தகராறு குறித்த ஆவணங்களில் கையொப்பமிடவும் கட்டாயப்படுத்தினாா்.

பின்னா் பகத், நந்தாவையும் சத்தாவையும் விடுவிப்பதற்கு முன்பு, அவரைக் கத்தியால் தாக்கி அவரது இரண்டு கட்டைவிரல்களையும் துண்டித்தாா். அதன்பின்னா் நந்தா டி.டி.யு. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து, மாா்ச் 18, 2020 அன்று துவாரகா செக்டா்23 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக மூன்று இணைகுற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். ஆனால், பகத் தலைமறைவாகவே இருந்தாா். டிசம்பா் 2025இல் தில்லி நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவுக் குழு புா்னியாவில் கைது செய்தது. விசாரணையின்போது, பகத் இவ்வழக்கில் தனக்குள்ள தொடா்பை ஒப்புக்கொண்டதுடன், கைது செய்யப்படுவதைத் தவிா்க்கத் தான் அடிக்கடி இடங்களை மாற்றிக்கொண்டிருந்ததையும் ஒப்புக்கொண்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.