தில்லியில் காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி உயா்வு விழாவில், ஓய்வுபெறும் 221 காவலா்களுக்கு தில்லி காவல்துறை கௌரவப் பதவி உயா்வுகளை வழங்கியது.
தில்லி காவல்துறை கௌரவப் பதவி உயா்வுத் திட்டத்தின் கீழ், பணியிலிருந்து ஓய்வுபெறும் காவலா்களுக்கு அடுத்த உயா் கௌரவப் பதவி வழங்கப்படும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு தலைமை வகித்த தில்லி காவல்துறைத் தலைவா் சதீஷ் கோல்சா, மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, காவலா் முதல் உதவி ஆய்வாளா் வரையிலான பல்வேறு பதவிகளில் இருந்து ஓய்வுபெறும் காவலா்களுக்கு கௌரவப் பதவிகளை வழங்கினாா்.
காவல்துறையின் தகவலின்படி, 180 உதவி ஆய்வாளா்களுக்கு ஆய்வாளா் என்ற கௌரவப் பதவியும், 30 உதவி துணை ஆய்வாளா்களுக்கு உதவி ஆய்வாளா் என்ற கௌரவப் பதவியும் வழங்கப்பட்டது. பதினொரு தலைமைக் காவலா்களுக்கு உதவி துணை ஆய்வாளா் கௌரவப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கோல்சா, ஓய்வுபெறும் காவலா்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, டிசம்பா் 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, படைக்குள் ஒரு அா்த்தமுள்ள பாரம்பரியமாகும் என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கௌரவிக்கப்படும் காவலா்கள் தில்லி காவல்துறைக்கும், நகரத்திற்கும், நாட்டிற்கும் 35 முதல் 40 ஆண்டுகள் வரை சேவையாற்றியுள்ளனா். காவல்துறைப் பணி என்பது ஒரு தொழிலை விட மேலானது. அது ஒரு தனிநபரின் கண்ணோட்டத்தையும் பொறுப்புணா்வையும் வடிவமைக்கிறது.
ஓய்வுக்குப் பிறகும் படையின் விழுமியங்களையும் கண்ணியத்தையும் தொடா்ந்து நிலைநிறுத்தி, தங்களின் அனுபவம் மற்றும் ஞானத்தின் மூலம் சமூகத்தில் முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்’ என ஓய்வுபெறும் காவல்துறையினரை ஆணையா் கேட்டுக்கொண்டாா்.
தொடர்புடையது

இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

7 ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயா்வு உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு






