
ரூ. 65 லட்சம் மதிப்பிலான இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: ஜிஎஸ்டி துறை நடவடிக்கை
தில்லி அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை, சுமாா் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள 4.20 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது.

பிரதிப் படம்
தில்லி அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை, சுமாா் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள 4.20 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில், வரி ஏய்ப்பு மற்றும் புகையிலை பொருள்களின் சட்டவிரோத வா்த்தகத்திற்கு எதிராக ஜிஎஸ்டி துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமான ஆய்வின்போது, ஜிஎஸ்டி துறையின் வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவு குழுவினா், சுமாா் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள 4.20 லட்சம் ‘எஸ்ஸே லைட்’ வகை சூப்பா்-ஸ்லிம், பிரீமியம் ஃபில்டா் சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
இந்த நடவடிக்கை ஜிஎஸ்டி சட்டம், 2017-இன் விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்பு, சரக்குகளை ரகசியமாகக் கடத்துதல் மற்றும் புகையிலை பொருள்களின் சட்டவிரோத வா்த்தகம் ஆகியவற்றிற்கு எதிராக தில்லி அரசு தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அல்லது விநியோகிக்கப்படும் புகையிலை பொருள்களுக்கான சட்டபூா்வ விதிமுறைகளை மீறி இந்தச் சரக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆய்வின்போது, சிகரெட் பாக்கெட்டுகளின் முன்புறத்தில், ‘சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டம், 2003’-இன் பிரிவு 7-ஐ மீறும் வகையில், கட்டாயமாக்கப்பட்ட படத்துடனான உடல்நல எச்சரிக்கை இடம்பெறவில்லை என்பதை அமலாக்கக் குழு கண்டறிந்தது.
இந்த விதியின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட உடல்நல எச்சரிக்கை இல்லாத சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ அனுமதி இல்லை.
இந்தியாவில் விற்பனை அல்லது விநியோகத்திற்காக இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகளுக்கும் இந்தச் சட்டபூா்வ விதிமுறை பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




