உரை மாண்புகள் - இரா.குமரவேலன்; பக்.160; ரூ.130; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.
கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட எட்டு கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார்; திருக்குறள் - பரிமேலழகர்; திருக்கோவையார் - பேராசிரியர் - இவ்வாறு அறிஞர் பெருமக்கள் மனதில் பதிந்துவிட்ட உரை (உண்மை)கள் இவை. அடியார்க்குநல்லாரின் சிலப்பதிகார உரைக்கு முன்பே அரும்பதவுரை ஒன்று இருந்துள்ளது. ஆனால், அடியார்க்குநல்லார் உரைதான் விரிவானதாக விளங்குகிறது. இதைப் பற்றி ஆராய்கிறது "அடியார்க்குநல்லார் உரைநலம்' என்ற கட்டுரை.
மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கு (திருச்சிற்றம்பலக்கோவை) உரை எழுதிய பேராசிரியர் உரைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பழைய உரை ஒன்று இருப்பதாகவும், அதை இன்றளவும் பலர் அறியாது உள்ளனர் என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், "இப் பேராசிரியர் ஓர் இலக்கிய உரையாசிரியராக அமைந்து விளக்கங்களைத் தந்துள்ளார். ஆனால், பழைய உரையாசிரியரின் உரையில் பக்தி உணர்வு மேலோங்கி இருக்கிறது. இதுவே இரண்டிற்குமிடையே அமைந்துள்ள அடிப்படை வேற்றுமை' என்பதை, "சிற்றம்பலக்கோவை: பழைய உரை'யில் விளக்கியுள்ளார்.
"ஒரு நூல், காலம் காலமாக மக்களிடையே வழங்கி வருமானால் பாட வேறுபாடுகள் (பாடபேதம்) ஏற்படுவது இயல்புதான். அவ்வகையில், திருக்குறளிலும் நிறைய பாட வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இதைப் பற்றி அறிஞர் பலரும் அக்கறை காட்டுவதில்லை' என்று கூறும் நூலாசிரியரின் ஆதங்கத்தில் உருவானதுதான் "திருக்குறளில் பாட வேறுபாடுகள்' என்ற கட்டுரை. மேலும், வ.உ.சி.யின் திருக்குறள் உரை, காமத்துப்பால் - கூற்று / கிளவி வேறுபாடுகள், நெடுநல்வாடை, தக்கயாகபரணி உரை - என "உரை' நூல்களை (பழைய-புதிய) மீள்பார்வை செய்து, இன்றைக்கும் பொருந்தும் வகையில் பல அரிய செய்திகளைச் சேர்த்துத் தந்துள்ளார். ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பயன் தரக்கூடிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









