தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 7:24 am

DIN

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும் - மறைஞானசம்பந்தர் - உரையாசிரியர்- மறைஞானதேசிகர்; பக். 150; ரூ. 135; டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. 044 - 2491 1697.

சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர். 

ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் அடியில் அமைந்திருப்பதால் இதனை குறள் வெண்பா நூல் என்றும் கூறுவர். இந்நூல் பிரமாணவியல், பதிசாதகவியல், பசுசாதகவியல், பாசசாதகவியல், பொதுவியல், போதகவியல் என ஆறு அங்கங்களோடு கூடிய 332 குறள் வெண்பாக்களையுடையது.

இந்நூலிலுள்ள பாடல்கள் சைவ சித்தாந்த கருத்துகளை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்றன. உதாரணமாக, நம் உடலில் ஆன்மா இருக்கிறது என்பதை விவரிக்கும் பாடலில் "புகையுள்ள இடத்து அக்கினி உண்டு என்று அனுமித்தாற்போல், இச்சரீரம் போக்குவரவு புரியக் காண்கையில் இவ்வுடலில் ஆன்மா உண்டென்று அனுமித்தறிக (கண்டுபுகை யாதி யனலா தியைக்கருதிக் கொண்டிருத்தல் முந்தியதாகும் (பிரமாணவியல் 39) என்கிறார். மேலும், நனவின் காரியம் கனவின்கண் மறந்து போவதால் மனிதர்கள் இறப்பதும் பின்வந்து பிறப்பதுவும் கனவும் நனவும் போன்றது (மறந்தாய் நனவைக் கனவின் மதிமுன் இறந்தே பிறந்தாய் இழந்து) என்றும் கூறுகிறார்.

சித்தாந்தக் கருத்துகளை எளிமையாக விளக்க முடியும் என்பதற்கு இந்நூலின் உரை ஓர் உதாரணம். பாடலுக்குப் பாடல் சைவமும் தமிழும் மணந்திடும் இந்நூல் உரையோடு வெளிவரவில்லையே என்கிற குறை இந்நூலால் தீர்ந்தது.

சைவ சமயிகளுக்கு மட்டுமல்லாது தமிழன்பர்களுக்கும் இந்நூல் ஓரு பொக்கிஷம் எனலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.