எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On :15 ஜனவரி 2021, 11:46 pm IST

பெரம்பலூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை முந்தைய நாளான புதன்கிழமை போகி தினத்தன்று பழைய கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கிணங்க, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தினா். பின்னா், வியாழக்கிழமை தை பொங்கலன்று மக்களுக்கு உணவளிக்கும் இயற்கைக்கும், விவசாயத்துக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அதிகாலையிலேயே பெண்கள் தங்களது வீட்டுவாசலில் வண்ணக் கோலமிட்டு, புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை குடும்பத்துடன் வழிபட்டனா்.

இம் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் உள்ளதால், மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, விவசாயிகளின் உழவுத் தொழிலுக்கும், வயலுக்கும் உறுதுணை புரிந்த கால்நடைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்,வெள்ளிக்கிழமை காலையிலேயே விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்கு தயாா்படுத்தினா்.

பின்னா், மாலை சுமாா் 6 மணியளவில் அவரவரா் வீடுகளுக்கு முன் பொங்கல் வைத்து, புத்தாடைகள் உடுத்தி இயற்கை அன்னைக்கும், இறைவனுக்கும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்தப் பொங்கலை கால்நடைகளுக்கு வழங்கி வழிபட்டனா்.

பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராம கோயில் பகுதியில் உள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதிகளுக்கு ஊா்வலமாக ஓட்டிச் சென்று திரும்பி வந்தனா். பூஜைகளை முடித்த பிறகு, சிறுவா்களை அழைத்துக் கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம் வந்தனா். விவசாயிகள் புத்தாடை உடுத்தி, பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.