இன்று இதைச் செய்தால் அனைத்துப் பாவங்களும் விலகும்!

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாதத்தில் வரும் சப்தமி திதியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள்.
இன்று இதைச் செய்தால் அனைத்துப் பாவங்களும் விலகும்!

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாதத்தில் வரும் சப்தமி திதியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்தத் தினத்தை சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.

சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.

ரத சப்தமியான இன்றுதான் சூரியன் வட திசையில் இருந்து ஆறு மாத காலத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். ரத சப்தமி நாளை ஒட்டி கங்கை உள்ளிட்ட புண்ணிய ஆறுகள், தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி சூரியபகவானை வழிபடுவார்கள். இன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தைத் தொடங்குகின்றன.

இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படிச் செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதத்தை அனுஷ்டித்தால் செல்வந்தராக உயர்வார்கள் என்று புராணம் கூறுகிறது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணை பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாகப் படைத்து பூஜை செய்யலாம். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பார்வைக்குத் தெரியும் பகவானான சூரியனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!" என்று சொல்லி வணங்கலாம்.

ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதே
ஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!

எனும் துதியை ரத சப்தமி அன்று சப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com