மிதுன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020

மிதுன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார். 
மிதுன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020


குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது. 

சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். 

மிதுன ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார். 

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை உள்ள மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே, எந்த காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்பவர்கள். முதிர்ந்த ருசியுடன் கூடிய உணவை உண்பார்கள். வாழ்க்கையில் ஏற்படும் தாழ்வு முன்னேற்றம் இரண்டையும் ஒரேமாதிரியாக எடுத்துக் கொள்வார்கள். உடல் வலிமை உள்ளவர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவார்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள். 

கிரகநிலை:

ராசியில் இருந்த ராகு அயனசயன போக ஸ்தானத்திற்கும், சப்தம ஸ்தானத்தில் இருந்த கேது ரணருண ரோக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.

மிதுன படம்

இந்த ராகு கேது பெயர்ச்சியால், குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.

சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமீன் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடைபட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது.

கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும்.

பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை.

வேகம் கூடவே கூடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. 

வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். 

உத்தியோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். 

அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

கலைத்துறையினருக்கு தாமதமான ஒப்பந்தங்கள் சிறப்பாக நடந்து முடியும். உடனிருப்பவர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் இரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். 

மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள். 

மிருகசீரிஷம் - 2, 3:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை  அதிகரிக்கும்.தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் - 1, 2, 3:
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி அடைவீர்கள். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6, 7

மலர்பரிகாரம்: தாமரை மலர்களால் மகாலட்சுமி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமோ நாராயணாயா நம: என்று 11 முறை கூறவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com