ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்புப் பதிவு 1

குரு என்றால் யார்? ஒருவருக்கு எத்தனை குருக்கள் இருக்க வேண்டும்? ஒரே ஒரு குரு போதுமா?
ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்புப் பதிவு 1

குரு என்றால் யார்? ஒருவருக்கு எத்தனை குருக்கள் இருக்க வேண்டும்? ஒரே ஒரு குரு போதுமா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம். 

குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்து அறியாமையையும், ரு என்பது அழித்தலையும் குறிக்கும். ஆக குரு என்பவர் அறியாமையை அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார். மேலும் கு என்பது  சத்துவ, ராஜச, தாமச குணங்களை கடந்தவர் என்று, குணாதீத நிலைமையையும், ரு என்பது ரூபாதீதம் எனும் உருவைக் கடந்த நிலையினைக் குறிக்கும். ஆக, குரு என்பவர் குணங்களையும், ரூபத்தையும்  கடந்த பரப்பிரமமே ஆவார். இதனைத் தான் குருவே சிவம் என்பர்.

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே." 

நடைமுறையில், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது. ஆசிரியரைக் குரு என்பதும் குருவை ஆசிரியர் என்பதுமாக நாம்  குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேஷ மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம். கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம்.  உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் உண்மை எது? என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது. மாதா, பிதா, குரு,  தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி'  என்பதில் தாரம் ஒன்று, குரு ஒன்று என்பது வெளிப்படையானதே. 

இதிலிருந்து ஒரு விஷயத்தை  நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு, தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே.  இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும். இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார். 

இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவைப் பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள்  கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவைப் பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே. இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும்  ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்? 

குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளுதலைக் (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது. ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும்,  வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டதாயும் அமையும். 

எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.
எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம். சரி, இனி அடுத்த கேள்விக்கு செல்வோம். 

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான  காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான். அவனிடம், "பஞ்சபூதங்களான  ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையைப் பூமியிடம் கற்றேன்;

தூய்மையைத் தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்குக் காரணம் என்பதை  உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையைச் சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதைச் செலுத்துவதை விட்டில்பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதைத் தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும்  தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள்.  இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை  உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.. தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லோருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மகான்களால் சீடர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும். நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்... உத்தவ  கீதையிலிருந்து ஒரு குரு சமர்ப்பணம் 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் 

கிருஷ்ணாவதாரம் முடியும்தருவாயில் உத்தவரும், கிருஷ்ணரும் உரையாடியது உத்தவகீதை ஆகிறது. இதில் கிருஷ்ணர் தனது அவதாரம் முடியும் காலம் வந்ததை உதவருக்குச் சொன்னபோது,  கிருஷ்ணர் இல்லாத உலகில் தான் மட்டும் இருந்து "நான்", "என்னுடைய" என்ற சபல புத்தியை எப்படி வெல்வது என்று உத்தவர் தேம்புகிறார். அதற்கு கிருஷ்ணர் ஒரு அவதூதர் (தத்தாத்ரேயர்)  இயற்கையே தனது குரு என்று 24 குருமார்களைக் காட்டியதை இங்கு விளக்குகிறார். குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாமும் அதைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 1. பூமி

தமது பூர்வஜென்ம பலன்களின் நிமித்தம் உயிரினங்கள் பல விதமான உடல்களில் பூமியில் வாழ்கின்றன. அவர்கள் புவியில் தோண்டியும், வெட்டியும், நெருப்பு எரித்தும் பல இடையூறுகள் செய்கிறார்கள்.  ஆனால் பூமியோ தனது பாதை தவறாமல் சுழன்றுகொண்டே இருக்கின்றது. மலைகளையும், ஆறுகளையும், வனங்களையும் கொண்டு எமது உணவையும், வசிப்பிடத்தையும் எவ்வித வேறுபாடின்றித்  தந்துகொண்டேயிருக்கிறது. ஒரு ஞானியும் பூமியைப் போல் பொறுமை, தூய்மை, அன்பு, நேர்மையுடன் நெறி தவறாது இருக்கவேண்டும். பூமி பொறுமையின் உவமை. 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 2. காற்று

காற்று இயல்பிலேயே தூய்மையானதும் மணமற்றதுமாகும். காற்று செல்லுமிடமெங்கும் அந்த இடங்களின் துர்நாற்றங்களையோ, அல்லது சந்தன மரங்களின் வாசனையையும் மணமிக்க மலர்களின்  சுகந்தத்தையும் பரப்புகின்றது. ஆனால் காற்றின் தூய்மை கெடுவதில்லை. காற்று கட்டுப்பாடின்றி வீசும்போது சஞ்சலமும் நிலைகுலைவும் ஏற்படும். பலவிதமான சூழ்நிலைகளில் வாழும் யோகியானவன்  சுக துக்கங்களைக் கடந்து கட்டுப்பாடற்ற காற்றைப் போல் தனது இதயம் மாசுபடாமல் வாழ்வில் பற்றின்றி இருக்க வேண்டும். காற்றானது பற்றற்ற நிலையை உணர்த்துகிறது. 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 3. ஆகாயம்

ஆகாயம் அண்டவெளி எங்கும் நிறைந்துள்ள போதிலும், எந்த அண்டத்துடனும் அது ஒன்றி இருக்கவில்லை. சில சமயம் ஆகாயம் இருள் சூழ்ந்து மந்தாரமாகவும், சிலசமயம் புகைப் படலமாகவும்,  சிலசமயம் பலவித நிறங்களின் பிரதிபலிப்பாகவும் தென்படும். ஆனால் இயற்கையிலேயே ஆகாயம் களங்கமற்ற தூய்மையாக, எப்போதும் நிறமற்றதாக எந்த ஒரு கரைபடாததாக உள்ளது. 

யோகியானவன் ஆகாயத்தைப் போல் எங்கும் நிறைந்திருந்தாலும், புற நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல், தனது சொந்த உள்ளுணர்வுகளுக்கு அடிமையாகாது இருக்கவேண்டும். ஆகாயம் சார்பற்ற நிலையின்  அவசியத்தை உணர்த்துகிறது. 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள்- குரு 4. நீர்

நீர் வையகத்தில் உயிரினங்கள் யாவற்றுக்கும் தாகம் தீர்ப்பது, இளைப்பாற உதவுவது, சுத்திகரிப்பது, சுவையற்றது, பரிசுத்தமானது. ஆனாலும் எப்போதும் பள்ளத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும்.

யோகியும் பரிசுத்தமான தூய்மை, இரக்கமான சுபாவம், பேதமற்ற உள்ளத்துடன் அஞ்ஞானிகளையும் அரவணைத்து யாவரையும் ஆத்மிக பாதையில் செல்ல உதவவேண்டும். நீர் தூய்மையான  உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 5. நெருப்பு

நெருப்பு எரியும்போது ஒளிவீசும் தன்மையுடையது. நெருப்பிற்கு சுயமான வடிவம் கிடையாது. நெருப்பு எரிபொருளின் தன்மைக்கேற்ப தற்காலிக வடிவைக் கொள்கிறது. நெருப்பில் எரிவது எதுவாயினும்  பாவம், புண்ணியம் பாராது எரித்து மாறுபாடில்லாத நீறாக்கி விடுகின்றது. ஆன்மா ஒரு உடலில் இருக்கும்போது தற்காலிகமாக அந்த உடலால் அறியப்பட்டாலும், ஆன்மா உருவமற்றது. தவத்தால்  பிரகாசிக்கும் ஒரு ஞானியும் நெருப்பைப் போலவே தன்னையண்டிய ஆன்மாக்களின் பாவங்களை அவர்களின் தகுதிகளைக் கருதாமல் மாறுபாடில்லாத நீறு போல் அழிக்கவேண்டும். நெருப்பு  பேதங்களற்ற நிலையை வலியுறுத்துகிறது

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 6. சந்திரன்

சந்திரன் வளர்ந்து பூரணையாகவும், தேய்ந்து அமாவாசையாகவும் தோன்றிக்கொண்டே இருக்கின்றது. சந்திரன் வளரும் காலத்தை வளர்பிறை (சுக்கிலபக்ஷம்) என்றும் தேயும் காலத்தைத் தேய்பிறை  (கிருஷ்ணபக்ஷம்) என்றும் அழைப்பர். ஆனால் சந்திரனிலோ எந்தவிதமான உள்ளார்ந்த மாற்றமும் இல்லை.

குழந்தையாய் பிறந்து முதுமை வரை ஒரு உடல் பல தோற்றங்களையும், அம்சங்களையும் கொண்டிருக்கும். ஆனால் ஆத்மாவோ இவற்றுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒரு யோகி அறிந்திருக்க  வேண்டும். சந்திரன் நிரந்தரமற்ற உடலையும், நிலையான ஆத்மாவையும் பிரதிபலிக்கிறது

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 7. சூரியன்

சூரியனின் பிரதிபலிப்பை பல கலாசாரங்கள் பல மாதிரியாகக் காண்கின்றன. ஆனால் சூரியன் ஒருவனே. சூரியன் தனது ஓளிக் கற்றைகளால் நீரை ஆவியாகக் கவர்கிறான். தகுந்த நேரத்தில் உயிர்  வாழ்வின் ஆதாரமான மழை நீராக அதனையே திரும்பவும் பொழிகிறான். அவன் நிரந்தரமான சேமிப்பில் எதையும் வைப்பதில்லை. யோகியும் பலராலும் பலவிதங்களில் நேசிக்கப்பட்டாலும், பற்றின்றி  தான் சேமித்தவற்றையும், ஞானத்தின் மூலம் உணர்ந்தவற்றையும் தகுந்த நேரத்தில் தன்னை அண்டியோர்க்கு அளிக்கவேண்டும். சூரியன் பாகுபாடற்ற வழிகாட்டுதலை உணர்த்தி இருக்கிறான்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 8. மாடப்புறா

மாடப்புறா ஒன்று தன் பேடையுடன் கூடுகட்டி குஞ்சுகள் கொண்டிருந்தது. ஒரு வேடன் தனது வலையில் குஞ்சுகளைப் பிடிக்க, அவற்றைக் காப்பாற்ற முயன்ற பெண் புறாவும் வலையில் சிக்கியது.  குடும்பமே சிக்கிக்கொண்டதைக் கண்ட ஆண் புறா தானும் அந்த வலையில் சிக்கிக்கொண்டது. 

உயிரினங்கள் யாவற்றிலுமே கடவுளை அடையக்கூடிய வாய்ப்புடன் பிறந்தவன் மனிதன். ஆனாலும் பந்த பாசமென்ற வலையில் அந்த புறாக்களைப் போல் சிக்கி சம்சாரத்தில் உழல்கிறான். இறுதியில்  ஆத்மா உடலை விட்டு நீங்கும்போது கடவுளை அறிவது கடினமாகின்றது. ஆன்மாவானது பந்தபாசங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை ஒரு ஞானி உணரவேண்டும்

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 9. மலைப்பாம்பு

மலைப்பாம்பு இரையைத் தேடி அலைவதில்லை. ஓரிடத்திலேயே (சிலவேளைகளில் பல நாட்களாக) இருந்து தண்ணருகே வரும் இரையை அதன் சுவை, தரம், பரிமாணம் பாராது விழுங்கி உயிர்  வாழ்கிறது. யோகியும் பிரியமான விஷயங்களின் மேல் நாட்டம் கொள்ளாமல், தன்னிச்சையாக வருவனவற்றைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் யோகியானவன் இடைவிடாத  தியானத்தின் மூலம் கடவுளை அறிந்துகொள்ளத் தன்னையே பயிற்சிக்கின்றான். திருப்தி அல்லது மனநிறைவை மலைப்பாம்பிலிருந்து அறியலாம்

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள் - குரு 10. சமுத்திரம் 

மழையும், எத்தனையோ ஆறுகளும் சமுத்திரத்தில் சங்கமாகிக் கொண்டே உள்ளன. கோடைக் காலங்களில் மழையோ, வற்றிய ஆறுகளோ சமுத்திரத்தை அடைவதில்லை. ஆனால் ஆழம் காண முடியாது.  பாரெங்கும் விரிந்துள்ள சமுத்திரங்களின் கடல் மட்டம் உயர்வதுமில்லை, தாழ்வதுமில்லை. அவற்றின் தன்மை நன்னீரினால் பாதிக்கப்படுவதுமில்லை. ஒரு யோகியும் தன்னிடம் எத்தகைய மானிடர்  அணுகினும், தனது இயல்பான குணத்தை விட்டு மாறவோ, குழம்பவோ கூடாது. நிலையான பதற்றமற்ற நிலையைச் சமுத்திரம் காட்டுகிறது. 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள்- குரு 11. விட்டில்பூச்சி

விட்டில்பூச்சி விளக்கின் ஒளியில் மயங்கி அதனுடன் சங்கமித்து உயிரை விடுகிறது. மாயையின் பிடியில் வீழ்ந்த மனிதன், விட்டில் பூச்சிபோல் சந்தோஷத்தை எங்கெங்கோ தேடுகிறான். கடைசியில்  வாழ்க்கையே சூனியமாகி ஆன்மீகத்தை விட்டு விலகி பிறவிச் சுழலில் சிக்குகிறான். ஆனால் மெய்யறிவு படைத்தவனோ ஞானத்தின் வழிநின்று நிலையற்ற சந்தோஷங்களை ஒதுக்கிவிட்டு  மாயையிலிருந்து விடுபட்டு பரமாத்மாவின் காலடிகளை அடைகிறான். விட்டில்பூச்சி மாயையின் பிடியில் விழுபவனை நினைவுபடுத்துகிறது. 

ஸ்ரீ தத்தாத்ரேயர் அருளிய இயற்கை தந்த 24 குருமார்கள்- குரு 12. தேனீ 

தேனீக்கள் பூவிலிருந்து பூவுக்கு மாறி மலர்களைக் குழப்பாமல் பூச்சாறினை எடுக்கின்றன. பின் அந்த பூச்சாறினை தேனாக சேமித்தும் வைக்கின்றன. ஒரு யோகியும் பல விதமான வேதங்களையும்  ஆகமங்களையும் சமுதாயத்திலிருந்து கற்று அவற்றிலிருந்து ஞானத்தை அறியத் தேவையான அறிவுறுத்தல்களை கிரகித்துக் கொள்ளவேண்டும். பல மூலங்களிலிருந்து ஞானத்தை அடைவதைத் தேனீ   உணர்த்துகிறது.

- ராகேஸ் TUT
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com