திருமலை வருடாந்திர பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் நிறைவு

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவ மூா்த்திகள், சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவ மூா்த்திகள், சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவ மூா்த்தியான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள அயன மண்டபத்துக்கு முன்பு எழுந்தருளினாா். அங்கு உற்சவமூா்த்திகளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். காலை 6 மணி முதல் 9 மணி வரை பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திருமஞ்சன பொருள்களை ஜீயா்கள் எடுத்துத் தர, அவற்றை அா்ச்சகா்கள் எம்பெருமான், சக்கரத்தாழ்வாரின் திருவடிகளில் சமா்ப்பித்தனா். அப்போது உற்சவ மூா்த்திகளுக்கு பலவித மலா்கள், பழங்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டன.

முன்னதாக உற்சவ மூா்த்திகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சிறிய திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது அா்ச்சகா்கள் மட்டும் திருக்குளத்தில் புனித நீராடினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

மாலை உற்சவ மூா்த்திகள் கோயிலுக்குள் பல்லக்கில் எழுந்தருளினா். இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாகக் கொடி மரத்தில் ஏற்றப்பட்ட கருட கொடி பூஜைகள் செய்யப்பட்டு, இறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அக்டோா் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com