நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. கடவுள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டாடும் வகையில் இப்பண்டிகை அமைந்துள்ளது.
ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளான ஆவணி மாத அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளைதான் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல்வேறு பெயர்களில் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாத அஷ்டமி திதி அத்துனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணமே ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த திருநாள் என்பதால்தான்.
இதையும் படிக்கலாமே.. குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை
அன்றைய தினம், வீடுகளில் கிருஷ்ணருக்கு புத்தாடை, அணிகலன்கள் அணிவித்து வாசனை நிறைந்த மலர்களால் அலங்கரிப்பார்கள். காலையிலிருந்து விரதமிருந்து, கிருஷ்ணரின் துதிப் பாடல்களைப் பாடி, அவருக்குப் பிடித்தவற்றை நைவேதமாக வைத்து வழிபாட்டால், வாழ்வில் நலமும், வளமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.
எப்போது கொண்டாட வேண்டும்?
ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11.25க்கு தொடங்கி, ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்கு நிறைவடைகிறது. ரோகிணி நட்சத்திரமானது ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கள்கிழமை காலை 6.39 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 9.44க்கு நிறைவடைகிறது.
வழக்கமாக வட மாநிலங்களில் ஜென்மாஷ்டமியை கிருஷ்ண பகவான் பிறந்த நள்ளிரவு நேரத்தில்தான் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழகம் போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மாலை 6 மணிக்கு விளக்கு வைத்ததும், கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள் தொடங்குவது வழக்கம். திங்கள்கிழமையன்று நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் பார்த்தும் பூஜையை துவங்கலாம். அந்த வகையில், மாலையில் 7.30 முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் கிருஷ்ணருக்கான பூஜைகளை செய்து, வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.
கிருஷ்ண பகவான் பிறந்தநேரத்தில் அதாவது நள்ளிரவில் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி முதல் 12.40 மணி வரை பூஜை செய்யலாம்.