நாச்சியார்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்!

பங்குனி பிரம்மோற்சவம் நாச்சியார் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்..
நாச்சியார்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்!
Published on
Updated on
1 min read

கும்பகோணம் நாச்சியார் கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சீனிவாச பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பதால், இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108 வைணவ தலங்களில் 20-வது திவ்ய தேசமாகவும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் 14வது திவ்ய தேசமாகவும் போற்றப்படுகிறது.

இத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு 7 ஆம் தேதி பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், 12ஆம் தேதி திருத்தேரோட்டமும், நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com