மீனாட்சியம்மன் கோயிலில் திருத்தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்கும் வகையில் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மீனாட்சியம்மன் கோயிலில் திருத்தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!
Published on
Updated on
1 min read

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்கும் வகையில் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.

தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய தேர் புறப்பாடாகி அதைத் தொடர்ந்து சிறிய தேரும் புறப்பாடானது.

சுவாமி அம்மன் திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து முதலில் விநாயகரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் செல்லும். சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்து அடையவுள்ளது.

மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருவிழாவினை காண மதுரை, சுற்று வட்டாரங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com