2026-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சிக்கான பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தஸ்ரீ ஸ்ரீபராபவ வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது வைகாசி மாதம் 12ம் தேதி (26-05-2026) செவ்வாய்க்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி - ஹஸ்தம் நக்ஷத்ரம் - ஸித்தி நாமயோகம் - வ்யாகாத நாமயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 11.08-க்கு கடக லக்னத்தில் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி - பராபவ வருஷம் - வைகாசி மாதம் 19ம் தேதி - 02.06.2026 - செவ்வாய்க்கிழமை - உதயாதி நாழிகை: 20:12 - மதியம் மணி 01:50க்கு மாறுகிறார்.
நவக்கிரகங்களில் சுபக்கிரகங்களாக வர்ணிக்கப்படுவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே! இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் எடுத்துக்கொள்ளப் படும். அதேபோல புதனும் சுபக்கிரகத்தோடு சேருகிற போது சுபத்தன்மை உடையவராகவும், அசுபரோடு சேருகிறபோது பாபத்தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுபகிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும்- சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது.
மேற்கண்ட இரண்டு முழு சுபகிரகங்களிலும் குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுரகுரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும், நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் குரு பார்க்கக் கோடி தோஷம் அகலும் என்றும்; கோடி நன்மை என்றும் சொல்லுவார்கள்.
அப்படிப்பட்ட குரு, வருடம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்லுவதுபோல, குருப்பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும், குருப் பார்வையால் நன்மைகள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்ப்பலனும்; ஜென்மம், 4, 10-ஆம் இடங்களில் வரும்போது சமபலனும் நடக்கும்.
பொது பலன்கள்
கற்கடக லக்னம், கன்னியா ராசி ஹஸ்தம் நக்ஷத்ரத்தில் குரு கற்கடக ராசிக்கு உச்சமாக மாறுகிறார். சந்திரன் வீடான கடகத்திற்கு பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குரு உச்சமாக அமர்கிறார். முழு சுப கிரகமான குரு பகவான் வலிமையான கடகத்தில் அமர்வதால் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகள் நவீனமாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பல வசதி, வாய்ப்புகள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து மக்களுக்கும் கிட்டும்.
வருமான வரி சம்பந்தமாக புது சலுகைகள் கிடைக்கும். நாடெங்கும் மின் உற்பத்தி பெருகும். நதிகளை இணைக்க பேச்சு வார்த்தை தொடங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும். விலைவாசி குறையும். உணவு கலப்படத்தை தடுக்க கடுமையான சட்டம் வரும்.
கற்கடக லக்னத்தில் குரு மாறும்போது ராசிநாதன் சந்திரன் சுய சாரமாக இருக்கிறார், எனவே கல்வித் துறை நவீனமாகும். தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். அண்டை நாடுகளின் அத்துமீறல்கள் ஒடுக்கப்படும்.
கற்கடகத்தில் வீற்றிருக்க வரும் குருவால் அரசியல் குழப்பம் சீரடையும். அதிக அளவில் இருந்த விரையங்கள் குறையும். தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும்.
தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும்.
மடாதிபதிகள் மற்றும் சன்னியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்னைகள் தீரும். பசுபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும்.











