/

இரட்டை பதக்கம் வெல்லுமா இந்திய டென்னிஸ் அணி?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 15 விளையாட்டுகளில் 121 பேருடன் களம் காண்கிறது இந்திய அணி. அதில் டென்னிஸும் ஒன்று. இந்தியாவின் சார்பில் 4 பேர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

News image
Updated On :22 ஜூலை 2016, 2:17 pm

ஏ.வி. பெருமாள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 15 விளையாட்டுகளில் 121 பேருடன் களம் காண்கிறது இந்திய அணி. அதில் டென்னிஸும் ஒன்று. இந்தியாவின் சார்பில் 4 பேர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

ஆடவர் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-பிரார்த்தனா தோம்ப்ரே ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா-சானியா மிர்சா ஜோடியும் களமிறங்குகின்றன.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் இந்தியாவுக்கு கணிசமான பதக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்காக மட்டுமே இணைந்து விளையாடும் பயஸும், போபண்ணாவும் தங்களின் வறட்டு கௌரவத்தை புறந்தள்ளிவிட்டு நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வோடு விளையாடினால் மட்டுமே பதக்கம் வெல்ல முடியும்.

1996-இல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் பயஸ் வெண்கலம் வென்றார். அதைத் தவிர்த்துப் பார்த்தால் சர்வதேச இரட்டையர் டென்னிஸில் கோலோச்சிய இந்தியாவால் ஒலிம்பிக்கில் வேறு எதையும் சாதிக்க முடியவில்லை.

லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா என 3 தலைசிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்கள் இந்தியாவில் இருந்தபோதும், அவர்கள் இடையிலான கருத்து வேறுபாடு, அதனால் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால் பயஸின் வாய்த் துடுக்கு, பூபதி, போபண்ணா ஆகியோர் பயûஸ புறக்கணித்தது, கலப்பு இரட்டையர் பிரிவில் பூபதி-சானியா ஜோடி கலக்கி வந்த நிலையில், அதைப் பிரித்து பயúஸாடு சானியாவை விளையாட வைத்தது போன்ற காரணங்களால் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பியது இந்திய அணி.

இந்த முறையும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே பயûஸ தனது இணையாக சேர்த்துள்ளார் போபண்ணா. 7-ஆவது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கும் 42 வயதான பயஸுக்கு இதுவே கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். அதேநேரத்தில் போபண்ணா இன்னொரு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என்றாலும், அப்போது அவருக்கு பயஸ் போன்ற ஒரு வலுவான துடிப்புமிக்க இணை கிடைப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

42 வயதிலும் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார் பயஸ். போபண்ணாவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இருவரும் தங்களின் கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டு களமிறங்கும்பட்சத்தில் தங்கம் வெல்வார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரட்டையர், கலப்பு இரட்டையர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் பயஸ். போபண்ணா இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வென்றதில்லை என்றாலும், அவரை குறைத்து மதிப்பிட முடியாது. சர்வதேச அளவில் 14 இரட்டையர் பட்டங்கள் வென்றிருக்கிறார். இந்த ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்பட்சத்தில் அது இந்திய டென்னிஸ் வரலாற்றில் பொன்னாளாக அமையும். வறட்டு கெளரவத்தை மறந்துவிட்டு தேசத்தின் கெளரவத்துக்கு முன்னுரிமை கொடுக்குமா

Story image

பயஸ்-போபண்ணா ஜோடி?

கலப்பு இரட்டையர்: கடந்த ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கணிசமான பதக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் பயஸுடன் சானியாவை ஜோடி சேர்த்ததன் மூலம் அந்த வாய்ப்பை பறித்தது அகில இந்திய டென்னிஸ் சங்கம். ஆனால் இந்த முறை சானியா மிர்சாவும், ரோஹன் போபண்ணாவும் இணைந்து களமிறங்குவதால் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் சானியா மிர்சா. இந்த சீசனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் வென்றிருக்கிறார். தொடர்ச்சியாக 41 ஆட்டங்களில் வென்று சாதித்ததோடு, கடந்த இரு ஆண்டுகளாகவே உச்சக்கட்ட ஃபார்மிலும் இருக்கிறார்.

அதேநேரத்தில் போபண்ணா ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருக்கிறார். போபண்ணா, சானியா இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. நிறைய போட்டிகளில் ஒன்றாக இணைந்து ஆடிய அனுபவம் கொண்டவர்கள். போபண்ணா "ஆட் கோர்ட்'டில் (ஆடுகளத்தில் இடதுபுறம்) ஆடக்கூடியவர். சானியா மிர்சா "டியூஸ் கோர்ட்'டில் (ஆடுகளத்தின் வலதுபுறம்) ஆடக்கூடியவர். இது போபண்ணா-சானியா ஜோடிக்கு கூடுதல் பலமாகும். எனவே கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கமோ அல்லது ஏதாவது ஒரு பதக்கமோ நிச்சயம் இந்தியாவுக்கு கிடைக்கும் என நம்பலாம்.

மகளிர் இரட்டையர்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடவுள்ள பிரார்த்தனா தோம்ப்ரே அனுபவமற்றவர் என்பது பின்னடைவாகும்.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் சானியாவுக்கு இணையான மற்றொரு வீராங்கனையை உருவாக்காமல் விட்டதற்கு அகில இந்திய டென்னிஸ் சங்கத்தை சாடுவதைத் தவிர வேறு வழியில்லை. முன்னணி வீராங்கனை ஒருவருடன் இணைந்து களமிறங்கியிருந்தால், ஒலிம்பிக்கில் சானியா மிகுந்த நம்பிக்கையோடு எதிர் ஜோடியை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இரட்டையர் தரவரிசையில் 198-ஆவது இடத்தில் இருக்கும் தோம்ப்ரே, ஐடிஎஃப் போட்டியில் இரட்டையர் பிரிவில் 17 பட்டங்கள் வென்றிருந்தாலும், ஏடிபி போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சானியாவும், தோம்ப்ரேவும் இணைந்து வெண்கலம் வென்றிருக்கிறார்கள்.

எனினும் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளிலும் இருந்து முன்னணி வீராங்கனைகள் ஜோடி சேர்ந்து களமிறங்குவார்கள். அவர்களுக்கு எதிராக சானியா சிறப்பாக ஆடினாலும், தோம்ப்ரே சமாளிப்பது கடினம். எனவே இரட்டையர் பிரிவில் சானியா-தோம்ப்ரே ஜோடி பதக்கம் வெல்லும் என்று கூறினால் அது நிச்சயம் தவறான கணிப்பாகவே அமையும். ஆனால் சானியாவோ, "தோம் ப்ரே, முன்னணி வீராங்னைகளை துணிச்சலாக எதிர்கொள்ளக்கூடியவர்' என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

சானியாவின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா தோம் ப்ரே?

19-ஆவது ஒலிம்பிக் போட்டி 1968-இல் மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் அக்டோபர் 12 முதல் 27 வரை நடைபெற்றது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமை மெக்ஸிகோவுக்கு கிடைத்தது. மற்றொரு முக்கிய அம்சமாக கடல் மட்டத்தில் இருந்து 7,350 அடி உயரத்தில் உள்ள மெக்ஸிகோ நகரில் போட்டிகள் நடைபெற்றன. இதனால் காற்றழுத்த குறைவுப் பிரச்னையால் வீரர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. வளர்ந்த நாடுகள் மட்டுமே நடத்தி வந்த ஒலிம்பிக்கை முதல்முறையாக வளரும் நாடான மெக்ஸிகோ சிறப்பாக நடத்திக் காட்டியது. மெக்ஸிகோவின் டி சோடேலோ ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஜோதியை ஏற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்த ஒலிம்பிக்கில் படகுப் போட்டியில் பங்கேற்ற ஜாக்ஸ் ரோஜ், பின்னாளில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவரானார்.

இந்த ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதிக்கமே நீடித்தன. அமெரிக்கா 45 தங்கம், 28 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. சோவியத் யூனியன் 29 தங்கம், 32 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும், ஜப்பான் 11 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்று 3-ஆவது இடத்தையும் பிடித்தன. ஹங்கேரி அணி 32 பதக்கங்களை வென்றபோதிலும், ஜப்பானைவிட ஒரு தங்கம் குறைவாக வென்றதால் 4-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இன வெறிக்கு எதிர்ப்பு

200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ஆப்பிரிக்க - அமெரிக்க வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லோஸ் ஆகியோர் மனித உரிமை மீறல், இன வெறி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற கையுறை அணிந்து வந்திருந்தனர். கால்களில் ஷு அணியாமல் கறுப்பு காலுறையுடன் வந்தனர். ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் நார்மனும் அவர்களுக்கு ஆதரவாக கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதற்காக டாமி ஸ்மித், ஜோன் கார்லோஸ் ஆகியோருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயுள்கால தடை விதித்தது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம். பீட்டர் நார்மன் அடுத்த ஒலிம்பிக் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தடகளத்தில் 4 தங்கம்

வட்டு எறிதல் போட்டியில் அமெரிக்காவின் ஒயர்டெர் தொடர்ந்து 4-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் தடகளப் போட்டியில் தொடர்ந்து 4 தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

உலக சாதனை

நீளம் தாண்டுதலில் அமெரிக்காவின் பாப் பீமோன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனை படைத்தார். இது அவரது முந்தைய உலக சாதனையைவிட 55 செ.மீ. அதிகமாகும். இச்சாதனை 23 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-இல் அமெரிக்க வீரர் மைக் பாவேல்லால் முறியடிக்கப்பட்டது.

ஊக்கமருந்தில் சிக்கிய முதல் நபர்

ஸ்வீடன் தடகள வீரர் ஹான்ஸ் குன்னர் ஊக்கமருந்து பயன்படுத்தியதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நிறைய பீரை குடித்துவிட்டு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. விளையாட்டில் ஊக்கமருந்து சோதனை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சிக்கிய முதல் நபர் ஹான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.