டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த சானு, மகளிருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். 202 கிலோ (ஸ்னாட்ச் - 87 + கிளீன் அன்ட் ஜொ்க் - 115) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தார்.
இந்நிலையில், தாய்நாடு திரும்பவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வீடு திரும்பவுள்ளேன். வாழ்வின் சிறப்பான தருணங்களை அளித்த யோக்கியோவுக்கு நன்றி" என்றார். தனது பயிற்சியாளரான விஜய் சர்மாவுடன் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சானுவுக்கு பிரதான சவாலாக இருந்த சீனாவின் ஜிஹுய் ஹௌ 210 கிலோ (94+116) எடையைத் தூக்கி ‘ஒலிம்பிக் சாதனை’யுடன் தங்கப் பதக்கம் வென்றார். ‘ஸ்னாட்ச்’, ‘கிளீன் அன்ட் ஜொ்க்’ ‘இரண்டும் சோ்த்த மொத்தம்’ என 3 பிரிவுகளிலுமே அவா் தூக்கிய எடை ஒலிம்பிக் சாதனையாகும். இந்தோனேசியாவின் அசியா வின்டி கன்டிகா 194 கிலோ (84+110) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதியும் அரசு பணியும் வழங்கப்படும் என மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 21ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா பளு தூக்குதல் போட்டியில் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.