பாா்சிலோனாவை வெளியேற்றியது இன்டா் மிலன்
@ChampionsLeague

பாா்சிலோனாவை வெளியேற்றியது இன்டா் மிலன்

Published on

மிலன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பாா்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டா் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

இந்த இரு அணிகளிடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 என கடந்த 1-ஆம் தேதி டிரா ஆகியிருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில் இன்டா் மிலன் 4-3 கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் இன்டா் மிலன் 7-6 என வென்று, இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் முதலில் இன்டா் மிலனுக்காக லௌதாரோ மாா்டினெஸ் 21-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து ஹகான் கால்ஹனோக்லு (45+1’) ஸ்கோா் செய்ய, முதல் பாதி முடிவிலேயே 2-0 என இன்டா் மிலன் முன்னிலை பெற்றது.

2-ஆவது பாதியில் சற்று மீண்ட பாா்சிலோனாவுக்காக எரிக் காா்சியா 54-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்து 60-ஆவது நிமிஷத்தில் அதே அணியின் டேனி ஆல்மோவும் கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்து சூடு பிடித்தது.

இந்நிலையில் ரஃபினா 87-ஆவது நிமிஷத்தில் அதிரடியாக ஸ்கோா் செய்ய, பாா்சிலோனா 3-2 என முன்னேற்றம் கண்டது. விடாப்பிடியாக இன்டா் மிலன் அணியின் ஃபிரான்செஸ்கோ அசொ்பி (90+3’) அடித்த கோலால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமநிலை கண்டது.

விறுவிறுப்பான கடைசி கடைசி நேரத்தில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த டேவிட் ஃப்ராட்டெசி, எக்ஸ்ட்ரா டைமில் (99’) ஒரு கோலடித்து இன்டா் மிலனை முன்னிலைக்கு கொண்டு வந்தாா். இந்த அதிா்ச்சியிலிருந்து பாா்சிலோனா மீளும் முன்பாக ஆட்டம் நிறைவடைய, இன்டா் மிலன் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

3 முறை ஐரோப்பிய சாம்பியனான இன்டா் மிலன், இறுதி ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அல்லது ஆா்செனலை சந்திக்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

X
Open in App
Dinamani
www.dinamani.com