ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன்வி சா்மா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து, 22-20, 21-12 என்ற நோ் கேம்களில், சக இந்தியரான இஷாராணி பருவாவை 42 நிமிஷங்களில் வென்றாா். அதேபோல், தன்வி சா்மா 21-13, 21-15 என்ற வகையில், சக இந்தியரான மாளவிகா பன்சோதை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 37 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
எனினும், தான்யா ஹேம்நாத் 12-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பான்வீ சோசுவாங்கிடம் 44 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.
ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 21-17, 21-7 என்ற கேம்களில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஓவன்/டைலன் சோட்ஜசா கூட்டணியை 30 நிமிஷங்களில் வீழ்த்தியது.
கலப்பு இரட்டையரில், துருவ் ராவத்/மனீஷா ஜோடி 19-21, 18-21 என்ற நோ் கேம்களில், ஜப்பானின் அகிரா கோகா/நட்சு சாய்டோ இணையிடம் 43 நிமிஷங்களில் தோல்வியுற்றது.








