
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற தேடல் இருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணிக்கு ரிஷப் பந்த் மிகவும் முக்கியமான வீரராக இருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தது. அவர் மிகவும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
மேலும், இந்திய அணியில் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருக்கின்றனர். அவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பர். கடந்த முறை விராட் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாதபோதிலும், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கியது.
தற்போது விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்தியாவுக்கு பலம் சேர்த்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பேட்டிங்கில் எந்த மாதிரியான யுக்தியை கையாளப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.